• Login / Register
  • செய்திகள்

    "நமக்காய் நாமே" வட மாகாண பட்டதாரிகள் யாழில் இன்று போராட்டம்!

    வட மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி "நமக்காய் நாமே" எனும் தொனிப்பொருளில் இன்றைய தினம் திங்கட்கிழமை (29) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு  முன்பாக போராட்டம் இடம்பெற உள்ளது.

    வட மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால் இப்போராட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பில் வட மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் மேலும் தெரிவிக்கையில்,

    எங்களால் மேற்கொள்ளப்படவுள்ள ஜனநாயக அடிப்படையிலான போராட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கவனத்தை ஈர்ப்பதுடன், எங்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். 

    இலங்கையில் மிக நீண்ட காலமாக பட்டதாரிகளுக்கான வேலையில்லா பிரச்சினை  நிலவி வரும் சூழலில் அவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றமை வேதனைக்குரிய விடயமாகும்.

    இலங்கையின் கல்வித் திட்டத்தின் கீழ் 20 வருடங்கள் கல்வி கற்று பட்டதாரிகளாக வெளியேறி, பின்னர் சாதாரண கூலித் தொழிலுக்கே சென்று, வாழ்வாதாரத்தை மேற்கொள்ளவேண்டிய மனச் சங்கடமான நிலையினையே எதிர்கொள்கின்றனர். 

    ஏராளமான இளைஞர்கள் தமது எதிர்கால கனவுக்காக படித்து பட்டதாரிகளாகி இன்று எவ்விதத்திலும் பயனற்றவர்களாக வேலையில்லா பட்டதாரிகள் என்ற பெயரோடு வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

    இவ்வாறான எமது அவல நிலைமை எதிர்கால மாணவர்களுக்கும் கல்வி மீதான விரக்தியையும் பட்டப்படிப்பு மீதான அவநம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது. 

    இதன் தாக்கம் இலங்கையின் கல்வி அறிவு மற்றும் வளர்ச்சியிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவற்றை அறிந்தும் அறியாமலும் உள்ள அரசாங்கத்தின் அசமந்தப்போக்கானது நாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய கல்வி கற்ற இளைஞர்களை பயந்தவர்களாக வாழ வைத்துள்ளது.

    இதன் விரக்தியாலும் மன அழுத்தத்தாலும் நாடு தழுவிய ரீதியில் பட்டதாரிகள் அனைவரும் ஜனநாயக அடிப்படையில் அமைதியான போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், வட மாகாண பட்டதாரிகளான நாமும் நான்கு விடயங்களை முன்வைத்து கவனயீர்ப்பை மேற்கொள்ளவுள்ளோம்.

    1. பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பில் போட்டிப் பரீட்சைகள் நிராகரிப்பு செய்ய வேண்டும்.

    2. ஏற்கனவே அரச சேவையில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை மீண்டும் ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறையில் கொண்டு வருதல் நியாயமற்றது. அது வேலையற்ற பட்டதாரிகளை பாதிக்கிறது.

    3. வட மாகாணத்திலுள்ள விசேட தேவையுடைய பட்டதாரிகளின் வாழ்வியல் தொடர்பிலான அரசாங்கத்தின் கரிசனை என்ன?

    4. வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் அவமானங்கள், சவால்கள், அதன் ஊடாக ஏற்படும் மன அழுத்தங்கள் மற்றும் பட்டதாரிகளின் எதிர்காலம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் என்ன?

    இதுபோன்ற விடயங்களை முன்வைத்து பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுகளும் ஏற்படுத்தாமல் ஜனநாயக முறையிலான கவனயீர்ப்பு போராட்டத்தில் தொடர்ந்து நமது கோரிக்கைகள் உள்ளடக்கிய மகஜரினை  ஆளுநரினூடாக ஜனாதிபதிக்கு கையளிப்பதுடன் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்குமான மகஜர் கையளிப்பு இடம்பெறவிருக்கிறது. 

    இதனால் வடக்கு மாகாண பட்டதாரிகள் உங்கள் நேரங்களை ஒதுக்கி இம்மாதம் 29ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று காலை 9 மணிக்கு "நமக்காய் நாமே" என்னும் தொனிப்பொருளில் போராட்டம் இடம்பெறவுள்ள நிலையில், அனைத்து வேலையற்ற பட்டதாரிகளும் கலந்துகொள்ளுங்கள் என்றனர்.

    Leave A Comment