உலகத் தமிழர்களுக்கான தனி நாடாக தமிழ் ஈழம் உருவாகும் - இந்திய மத்திய அரசு சுட்டிக்காட்டு!
உலகளாவிய ரீதியாக உள்ள அனைத்து தமிழர்களுக்கும் தனி நாடாக தமிழ் ஈழம் என்ற இலட்சியத்தை நோக்கியதான செயற்பாடுகள் சர்வதேச ரீதியாக தொடர்ந்து பல்வேறு வழிமுறைகளில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகள் நீடித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கம் (எல்டிடிஈ) மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு (2029 மே-14 வரை) மத்திய உள்துறை நீட்டித்துள்ளது.
இது தொடா்பாக நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (மே 14) மத்திய உள்துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில்,
‘விடுதலைப்புலிகள் இயக்கம், மக்கள் மத்தியில் பிரிவினைவாத போக்கை தொடா்ந்து வளா்த்து வருவதால், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அதற்கான ஆதரவு தளத்தை மேம்படுகிறது. எனவே, சட்டவிரோதச் செயல்கள் (தடுப்பு) சட்டம், 1967-இன் பிரிவு 3-இன் துணைப் பிரிவுகள் (1), (3) ஆகியவற்றைப் பயன்படுத்தி அந்த இயக்கத்துக்கு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
இரண்டு பக்க அறிவிக்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் நீட்டிக்கப்படுவதற்கான காரணமும் விவரிக்கப்பட்டுள்ளது.
அதில், விடுதலைப் புலிகள் இயக்கம் இந்திய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு பாதகமான நடவடிக்கைகளில் இன்னும் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசு கருதுவதாகக் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, 2009-ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் ஆயுத ரீதியாக தோல்வி கண்ட பிறகும், விடுதலைப் புலிகள் இயக்கம் ‘ஈழம்’ (தமிழா்களுக்கான சுதந்திர நாடு) என்ற கருத்தை கைவிடவில்லை என்றும், நிதி சேகரிப்பு மற்றும் ஈழத்துக்காக ரகசியமாகச் செயல்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பரப்புரைகள் மற்றும் எஞ்சியிருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவா்கள் அல்லது உறுப்பினா்கள் சிதறிய அதன் செயல்பாட்டாளா்களை மீண்டும் ஒருங்கிணைத்து உள்நாட்டிலும் சா்வதேச அளவிலும் இந்த அமைப்பை மீண்டும் எழுச்சி பெறச் செய்வதற்கான முயற்சிகளை தொடங்கியுள்ளனா்.
இந்த இயக்கத்துக்கு ஆதரவான குழுக்கள், மக்கள் மத்தியில் பிரிவினைவாத போக்கைத் தொடா்ந்து வளா்த்து வருவதோடு, இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவுத் தளத்தை மேம்படுத்துகின்றன.
இது இறுதியில் இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீது வலுவான செல்வாக்கை செலுத்தக்கூடும். அனைத்து தமிழா்களுக்கும் தனி நாடு (தமிழ் ஈழம்) என்ற அந்த இயக்கத்தின் நோக்கம், இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
மேலும், இந்தியாவின் ஒரு பகுதியை யூனியனிலிருந்து பிரிப்பதற்கு சமம் என்றும் உள்துறை அறிவிக்கையில் கூறியுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கம் 1976-இல் உருவாக்கப்பட்டது. இலங்கையில் தனி ஈழத்துக்காக போராடி வந்த அந்த இயக்கம், 1991-இல் தமிழகத்தில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னா், இந்தியாவில் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.
அப்போது முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காக ஏந்தப்பட்ட ஆயுதங்களை அதே தமிழ் மக்களிற்காக மௌனிப்பதாக 18 மே 2009 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அறிவித்திருந்த நிலையில் இன்று வரையான கடந்த 15 ஆண்டுகளில் இலங்கையிலோ, இந்தியாவிலோ பிற நாடுகளிலோ அந்த அமைபினாலோ அதன் உறுப்பினர்களினாலோ சிறு அசம்பாவிதங்கள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை.
தமிழ் மக்கள் மீதான் கட்டமைப்பு சார் இனவழிப்பு செயற்பாடுகள் முன்னிலும் வீச்சாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலும், முள்ளிவாய்ப்பால் இனப்படுகொலைக்கு உரிய நீதி கிடைக்காது தடுக்கப்பட்டு தாமதப்படுத்தப்பட்டு வரும் நிலையிலும், போரை முடிவுக்கு கொண்டுவந்த பின்னர் தமிழர்களுக்கான அரசியல் தீர்வினை வழங்குவதாக இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகள் தொடர்ந்து மீறப்பட்டு வருகின்ற நிலையிலும், அதனை தலையிட்டு நிறைவேற்ற வேயண்டிய இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பொறுப்பு நின்ற நாடுகள் கள்ளமௌனம் காத்து வருகின்ற நிலையிலும் தமிழர் தரப்பில் இருந்து குறிப்பாக இந்தியா வலுவாக இருப்பதாக கூறும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் எவ்வித எதிர்வினைகளும் ஆற்றப்படாதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் இந்தியாவின் தடை நீடிப்பு அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Leave A Comment