• Login / Register
  • செய்திகள்

    சீக்கிய புத்தாண்டுவிழாவில் கனடா பிரதமர்: "காலிஸ்தான் ஜிந்தாபாத்" என மக்கள் கோஷம்

    கனடாவில் இடம்பெற்ற  சீக்கிய புத்தாண்டு விழாவில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றிருந்தார்.

    சீக்கிய புத்தாண்டை முன்னிட்டு கனடாவின் டொரன்ட்டோ நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

    ஆன்டாரியோ சீக்கியர்கள் மற்றும் குருத்வாரா கவுன்சில் (ஓஎஸ்ஜிசி) சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான கனடாவாழ் சீக்கியர்கள் கலந்துகொண்டனர்.

    இவ்விழாவில், ஜஸ்டின் ட்ரூடோ பேசுவதற்காக மேடையை நோக்கி புறப்பட்டபோது, ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’ என உரத்த குரலில் முழக்கம் எழுப்பினர். அவர் மேடைக்கு வந்து பேசத் தொடங்கும் வரை இந்த கோஷம் தொடர்ந்தது. அப்போது என்.டி.பி. தலைவர் ஜக்மீத் சிங் மற்றும் டொரன்ட்டோ நகர மேயர் ஒலிவியா சவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் ட்ரூடோ பேசும்போது, “கனடாவின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாக பன்முகத்தன்மை விளங்குகிறது. இங்கு வசிக்கும் சீக்கியர்களின் உரிமைகளை பாதுகாக்க அரசு உறுதியுடன் உள்ளது” என்றார்.

    இந்நிகழ்ச்சியில் பேசுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் பீரே பாய்லீவ்ரே மேடைக்கு சென்ற போதும்,காலிஸ்தானுக்கு ஆதரவாக சீக்கியர்கள் முழக்கம் எழுப்பினர். அவர் பேசத் தொடங்கும் வரை இந்த கோஷம் ஒலித்தது.

    முன்னதாக, இந்திய அரசால் தீவிரவாதி என அறிவிக்கப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டி இருந்தார்.

    ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது. இதனால் இரு நாடுகளுக்கிடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ட்ரூடோ பங்கேற்ற நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு முழக்கம் எழுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





    Leave A Comment