• Login / Register
  • முகப்பு

    கனடாவில் தமிழினப் படுகொலை நினைவுச் சின்னம்: இலங்கை எதிர்ப்பு!

    இலங்கையின் தமிழ் இனப்படுகொலையை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னம் அமைப்பதற்கு கனடாவின் இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

    டொராண்டோ பகுதியின் பிரம்டன் எனப்படும் நகராட்சி பகுதியில் இந்த நினைவிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா அண்மையில் நடைபெற்றது.

    இலங்கையின் ஆட்சேபனை இருந்தபோதிலும், இலங்கை தமிழர்கள் அதிகம் வாழும் பிராம்ப்டன் நகரத்தின் முதல்வர் பேட்ரிக் பிரவுன் இந்த நினைவுச்சின்னத்தை நிர்மாணிப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேவேளை, முள்ளிவாய்க்காலில் நிர்மூலமாக்கப்பட்டு, அழித்துச் சிதைக்கப்பட்ட லட்சோபலட்சம் ஈழ்த்தமிழருக்கான நினைவுத் தூபியின் மாதிரிவடிவத்தை கனடாவின் பிறம்ரன் பெருநகரில் கடந்த ஆண்டு உத்தியோக பூர்வமாகப் பிரகடனப் படுத்தப்பட்டிருந்தது.

    இது தொடர்பாக அன்றைய நாளில் ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: 

    இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியே தமிழ் இனப்படுகொலைக்கான நினைவாலயத்தை கனடா பிரம்ரன் மாநகரசபை உருவாக்க முன் வந்தமை மிகுந்த மன மகிழ்வைத் தருகின்றது.

    கனடாவின் புகழ் பூத்த பூங்காவான செங்கூசி பூங்காவில் பிராம்ரன் நகரசபை இந்த நினைவாலயம் கட்டுவதற்கான நிலத்தை ஒதுக்கி தமிழ் மக்களுக்கு தந்துள்ளது.

    கோடை காலத்தில் லட்சோப இலட்சம் மக்கள் கூடுகின்ற அழகிய பூங்கா இது. இருபதாம் நூற்றாண்டில் நடந்து முடிந்த மிகப் பெரிய இனவழிப்பாக ஈழத்தமிழருக்கு நடந்தேறிய இனப்படுகொலை இருந்த போதிலும், அதனை இனவழிப்பு என்று ஐ. நா சபையும், மேற்குலக சமூகங்களும் இற்றைவரை இனப்படுகொலை என்று பேச மறுக்கின்றன.

    இந்நிலையில் பிராம்ரன் மாநகரசபையின் தமிழ் இனத்திற்கான இந்த அங்கீகாரம் ஓர் வரப்பிரசாதம் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

    உலகில் இனவழிப்பில் சிக்குண்டவர்களென யூத, ருவாண்டா மற்றும் ஆர்மீனிய மக்களை அடையாளப் படுத்தி அவர்களுக்கு அங்கிகாரம் கொடுப்பவர்கள், எம் ஈழத் தமிழ் மக்களின் பேரழிவைப்பற்றி பாராமுகமாக இருக்கிற இற்றைநாளில் இந் நிகழ்வு பெரு மகிழ்வு தருகின்றது.

    வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மகத்தான பெருவிழாவின் வரவேற்புச் சிறப்புரையை தமிழ் இனப்படுகொலை தூபி அமைக்கும் குழுவின் உப தலைவரும், கனடா ஒட்டாவா கால்ரன் பல்கலைக் கழகப் பொறியியல் துறை பேராசிரியர் சிவ சிவதயாளன் அவர்கள் தொடக்கி வைத்து உரையாற்றினார். இந்த நினைவுச் சின்ன திட்ட வடிவமைப்பை மேயர் பற்றிக் பிறவுண் மற்றும் பிராம்ரன் நகரசபையின் பிராந்தியஉறுப்பினர்களான மார்டின், பாற் வொற்னி, ஜெவ் போமன், கிரகம் மெக்ரிகோர் ஆகியோர் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றினார்கள்.

    இந்த நினைவாலய வடிவமைப்பு உலகின் பல நூற்றுக் கணக்கான மாதிரிவடிவங்களில் இருந்துபோட்டியடிப்படையில் தகுதியானதை தேர்வானதாக்கிய வடிவாகும்.

    இந்த நினைவாலயம் 12 அடி அகலமும், 18 அடி உயரமும் கொண்டதாக அமைய உள்ளது.

    உண்மையில் இதுதமிழரின் 12 உயிர்எழுத்துகளையும், 18 மெய்எழுத்துகளையும் உணர்த்தி நிற்கிற அழகிய தமிழின் அற்புதம்.

    கார்திகை பூ வடிவமைப்பை மையமாக கொண்டு காலநிலை, மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு காரணங்களை கருத்திற் கொண்டு இதனை சிறப்பு கட்டிட நிபுணர் Ms. Bernia Ramic (from Bosnia) நேர்தியாக வடிவமைத்திருக்கிறார்.

    தமிழர் தம் தேசத்தில் சிங்கள இனவெறியரசு நடாத்திய நினைத்துப் பார்க்க முடியாத உயிர் இழப்புகளை கூட்டாக நாம் நினைவு கூர்வது புலம் பெயர் தமிழர்களாகிய எமது கடமையாகும். 

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், குறித்த நினைவு சின்னத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா அண்மையில் நடைபெற்றதை அடுத்து கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment