மே 18 தமிழ் இனவழிப்பு நினைவேந்தல் நாள் : கனடா அறிவிப்பு
மே 18ஆம் தேதியை தமிழ் இனவழிப்பு நினைவேந்தல் நாளாக
கனடா நாட்டு நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
இலங்கையில் 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிப்போரில், முல்லைத்தீவு
மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழ்மக்களில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் இனப்படுகொலை
செய்யப்பட்டார்கள்.
இதன் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் மே 18தேதியன்று முள்ளிவாய்க்கால்
படுகொலை நினைவேந்தல் நிகழ்வை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் மே 18ஆம்தேதியை தமிழ் இனவழிப்பு நினைவேந்தல்
நாளாக கடைபிடிக்கும் தீர்மானம் கனடா நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. லிபரல் நாடாளுமன்ற உறுப்பினரான கேரி ஆனந்தசங்கரி
இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்தை கனடா நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக
ஆதரித்ததால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுபற்றி டிவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள கனடா
நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அனிதா
ஆனந்த், ‘நான் ஒரு கனடிய தமிழர் என்ற நிலையில், காமன்ஸ் அவை, மே 18ஆம்தேதியை தமிழ்
இனவழிப்பு நினைவேந்தல் நாளாக அங்கீகரித்திருப்பதால் பெருமை அடைகிறேன்.
இலங்கையில் 26 ஆண்டுகளாக நடந்த ஆயுதப்போராட்டத்தில்
துன்பகரமாக உயிர்நீத்த அனைவரையும் இனி ஒவ்வோர் ஆண்டும் நாக்ஙள் நினைவுபடுத்துவோம், மரியாதை அளிப்போம்’ என்று பதிவிட்டுள்ளார்.
கேரி ஆனந்தசங்கரி அவரது டிவிட்டர் பதிவில், ‘மே
18ஆம்தேதியை தமிழ் இனவழிப்பு நினைவேந்தல் நாளாக கனடிய நாடாளுமன்றம் இன்று அங்கீகரித்திருக்கிறது. இது மிக முக்கியமான நாள்.
உலக அளவில் இப்படி மே 18ஆம் தேதியை தமிழ் இனவழிப்பு நினைவு நாளாக அங்கீகரித்திருக்கும்
முதல் நாடாளுமன்றம் கனடா நாட்டு நாடாளுமன்றம்தான்’ என்று கூறியுள்ளார்.
இறுதி ஈழப்போரில் உயிர்நீத்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள
கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் டூருடே, ‘நமது மனங்கள், அந்த துன்பியல் நிகழ்வு தொடர்பாக
வலிட வேதனையுடன் வாழும் அனைத்து குடும்பங்களுடனும் இருக்கிறது.
முள்ளிவாய்க்கால் படுகொலை உள்பட 26 ஆண்டுகால இலங்கை ஆயுதப் போராட்டத்தில் உயிர்நீத்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறோம். காணாமல் போனவர்கள், காயமடைந்தவர்கள், இடம்பெயர்ந்தோரையும் நாம் நினைத்து வருந்துகிறோம்’ எனக் கூறியுள்ளார்.
Leave A Comment