• Login / Register
  • செய்திகள்

    போராளிகள் உள்ளிட்டோருக்கு கொழும்பில் நினைவகம் - அமைச்சரவை அனுமதி!

    இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது குடியியல் குழப்பங்களின் விளைவாக உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் நினைவகமொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    கொழும்பு நகரில் பொருத்தமான இடமொன்றில் அதனை நிர்மாணிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
     
    சுதந்திரத்தின் பின்னர் இலங்கை, குடியியல் குழப்பங்கள், அரசியல் அமைதியின்மை, இன மோதல்கள் மற்றும் நீண்டகால ஆயுத மோதல்கள் போன்ற வரலாறுகளுக்கு முகங்கொடுத்துள்ளது.

    குறித்த காலப்பகுதியில் அனைத்து இன, மத, தொழில் மற்றும் ஏனைய தனித்துவங்களைக் கொண்ட பிரஜைகள் அவ்வாறான அபாயங்களுக்கும் சொல்லொணாத் துயரங்களுக்கும் ஆளாகியுள்ளனர்.

    இன ரீதியான, மத ரீதியான, அரசியல் ரீதியான கருத்தாக்கங்கள் அல்லது வேறு காரணங்களின் அடிப்படையில் எந்தவொரு வகையான மோதல்களும் மக்களின் நல்வாழ்க்கையில் மிகவும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதுடன், நாட்டின் முன்னோக்கிய பயணத்திற்கு தடையாகவும் அமைகின்றமை கடந்தகால கசப்பான அனுபவங்களை பறைசாற்றுவதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    எவ்வாறாயினும் மக்களின் அமைதியையும் பாதுகாப்பையும் ஆபத்துக்குள்ளாக்கி சமூக பொருளாதார கட்டமைப்புக்களை சீரழிக்கின்ற அத்தகைய சம்பவங்கள் அடிக்கடி தோன்றுகின்ற போக்குகள் தொடர்ந்த வண்ணமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மைகள் அல்லது குடியியல் குழப்பங்களின் விளைவாக உயிர்நீத்த பொதுமக்கள், முப்படையினர் மற்றும் காவல்துறையினர், உயிர்நீத்த போராளிகள் உள்ளிட்ட அனைத்து நபர்களையும் நினைவு கூருவதற்கான நினைவகத்தை நல்லிணக்கம் மற்றும் மீளிணைப்பின் அடையாளமாக கொழும்பு நகரில் பொருத்தமான இடமொன்றில் நிர்மாணிப்பதற்காக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    Leave A Comment