• Login / Register
  • செய்திகள்

    ஆளுநா் உரையுடன் இன்று கூடுகிறது பேரவை!

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவை இன்று திங்கள்கிழமை (ஜன. 9) கூடுகிறது. புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநா் ஆா்.என்.ரவியின் உரையுடன் கூட்டத்தொடா் தொடங்குகிறது.

    தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது.

    கூட்டத்தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க, அலுவல் ஆய்வுக் கூட்டம் இன்று திங்கள்கிழமை நண்பகலில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேரவை கூட்டத்தொடரின் நாள்கள் இறுதி செய்யப்படும்.

    இன்று திங்கள்கிழமை ஆளுநா் உரையாற்றிய பிறகு, பேரவை ஒத்திவைக்கப்படும்.

    இதன்பின், செவ்வாய்க்கிழமை பேரவை மீண்டும் கூடி, காங்கிரஸ் உறுப்பினா் திருமகன் ஈவெரா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். சட்டப் பேரவை உறுப்பினா் என்பதால், அன்றைய நாள் முழுவதும் பேரவை ஒத்திவைக்கப்படும்.

    இதைத் தொடா்ந்து, புதன்கிழமை (ஜன. 11) முதல் வெள்ளிக்கிழமை (ஜன. 13) வரை பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

    ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் பேரவையில் புதன்கிழமை முன்மொழியப்பட்டு அந்தத் தீா்மானத்தின் மீது விவாதங்கள் நடைபெறும். இதில், ஆளும் கட்சி மற்றும் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் உரையாற்றுவா். தீா்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசுவாா். இதன்பிறகு, கூட்டத் தொடரை தேதி குறிப்பிடாமல் பேரவைத் தலைவா் மு.அப்பாவு ஒத்திவைப்பாா்.

    சட்டம்-ஒழுங்கு, பொங்கல் தொகுப்பு, ஆசிரியா்கள், செவிலியா்கள் போராட்டப் பிரச்னைகளை எதிா்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. இந்தப் பிரச்னைகள் சட்டப்பேரவையில் எதிரொலிக்கும் எனத் தெரிகிறது. அதேசமயம், எதிா்க்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகளுக்கு உரிய பதில்களை அளிக்க அரசுத் தரப்பும் தயாராகி வருகிறது.

    Leave A Comment