• Login / Register
  • செய்திகள்

    மே 8-ந் தேதி சேலத்தில் ஆர்ப்பாட்டம்: விடுதலை சிறுத்தைகள் அறிவிப்பு

    காவல்துறையினரை கண்டித்து எதிர்வரும் மே 8-ந் தேதி சேலத்தில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளவுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.

    இது தொடர்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தீவட்டிபட்டியில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி சாதியவாத சமூகவிரோதிகள் ஆதிதிராவிட மக்களின் மீது வன்முறை வெறியாட்டம் நடத்தியுள்ளனர். காவல் துறையினரும் வழக்கம்போல பாதிக்கப்பட்ட எளிய ஆதிதிராவிட மக்கள் மீதே தாக்குதல் நடத்தி தமது அதிகார மேலாதிக்க ஆணவப்போக்கை வெளிப்படுத்தியுள்ளனர்.

    சாதிவெறியர்களின் கல் வீச்சிலும் காவல்துறையினரின் தடியடித் தாக்குதலிலும் படுகாயமடைந்த ஆதிதிராவிடர்கள் பலரைப் பொய்வழக்கில் கைதுசெய்து சிறைப்படுத்தியுள்ளனர்.

    சாதிவெறியர்கள் தாக்கியதிலும் காவல்துறையினர் தாக்கியதிலும் பெண்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் மற்றும் பலர் 'என்னும் பெயரில் ஆதிதிராவிட இளைஞர்களைக் கைது செய்வதில் காவல்துறையினர் இன்னும் தீவிரம் தீட்டிவருகின்றனர்.

    காவல்துறையின் இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அத்துடன், மாரியம்மன் கோவிலில் ஆதிதிராவிடர்கள் வழிபடுவதற்கு அனுமதிக்க வேண்டுமெனவும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

    இக்கோரிக்கையினை வலியுறுத்தி வருகிற 8-ந் தேதி (புதன்கிழமை) சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று அறிவித்துள்ளார்.



    Leave A Comment