• Login / Register
  • செய்திகள்

    கொரோனாவுக்கு யாழில் பெண் பலி; விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!

    நீண்ட காலத்திற்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிரான்சில் இருந்து தாயகம் திரும்பிய நிலையில் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்திருந்தார்.

    இதையடுத்து உயிரிழப்பின் பின் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (15) உறுதி செய்யப்பட்டது.

    குறித்த சம்பம்பவம் தொடர்பான செய்திகள் வெளியான நிலையில் மக்களிடையே மீளவும் கொரோனா தொடர்பான பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், கொரோனா (கோவிட்) தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார்.

    மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

    கோவிட் (கொரோனா) தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் வருமாறு.

    1. கோவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும். (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப் பேண வேண்டும்.)

    2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர் கோவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை.

    3. கோவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை.

    4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும்.

    5. கோவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும்.

    6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கோவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை.

    7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

    2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் குறித்த விடயங்கள் இலங்கையில் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment