• Login / Register
  • செய்திகள்

    நதக-வுக்காக சகல கட்சிகளும் பிரச்சாரம்; சீமான் பரபரப்பு பேச்சு!

    நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களுக்காக சகல கட்சிகளும் பிரச்சாரம் செய்யும் வகையில் எமக்கு சின்னம் கிடைத்திருப்பதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தை முடக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தினால் வேறு கட்சிக்கு வழங்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

    மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன.

    தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்களை அண்மையில் ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்து சீமான் அதிரடி காட்டியிருந்தார்.

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள "ஒலிவாங்கி" (மைக்) சின்னத்தை இன்று அறிமுகம் செய்து வைத்தார் சீமான்.

    சின்னத்தை அறிமுகம் செய்து வைத்து கருத்து தெரிவிக்கையில்,

    கூட்டணி வைத்திருந்தால் நான் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். கூட்டணி வைத்தவர்களுக்கு சைக்கிள், குக்கர் சின்னம் கிடைத்தது போல எனக்கும் கிடைத்திருக்கும்.

    தேர்தல் ஆணையம், சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் சுதந்திரமாக இயங்குவதில்லை.

    சின்னத்தை இழந்தாலும் நாம் எண்ணத்தை இழந்துவிடக்கூடாது. இதைவிட சிறந்த சின்னம் இல்லை என்று முடிவு செய்துவிட்ட பின்னர் இந்த சின்னத்திலேயே போட்டியிடுகின்றோம்.

    கரும்பு விவசாயி சின்னத்தையும் நான் கேட்கவில்லை. தேர்தல் ஆணையம் தான் தந்தது. இந்த "ஒலிவாங்கி" சின்னத்தையும் நான் கேட்கவில்லை. அவர்களாகவே தந்துள்ளனர்.

    எமக்கு எது சரியாக இருக்கும் என்று என்னை விட தேர்தல் ஆணையத்திற்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அந்த அடிப்படையில் தான் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறார்கள் என நம்புகிறேன்.

    இந்த 'ஒலிவாங்கி' இல்லாமல் புரட்சியே கிடையாது. உலகப் பிரபலமான புரட்சியாளர்கள், மேதைகள் இதன் மூலமாகத்தான் தமது கருத்துகளை விதைத்து இந்த மண்ணிலே புரட்சியை உருவாக்கினார்கள்.

    இந்த தேர்தலில் எந்த கட்சிகாரனும் தங்களுடைய சின்னத்துக்கு வாக்கு கேட்கலாம். ஆனால் எந்த கட்சியும் என் சின்னத்தை தவிர்த்துவிட்டு வாக்கு கேட்டுவிட முடியாது.

    இவ்வளவு நெருக்கடிகளை கடந்து தொடர்ந்தும் களத்தில் நிற்பது மக்கள் எங்களை கைவிடமாட்டார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில்தான்.

    எங்களிடம் இருந்து சின்னத்தை பறித்து ஒழித்து வைத்து விளையாடும் பெருமக்களுக்கு ஒன்றை கூற விரும்புகின்றேன். கரும்பு விவசாயி சின்னத்திற்காக அல்ல சீமானுக்காகவும் அவன் பிள்ளைகளுக்கும் தான் வாக்கு என்பதை நிரூபித்து என்னை ஆகப்பெரும் தலைவராக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள். அதற்காக நன்றி. என்று தெரிவித்தார்.

    Leave A Comment