சடலத்தின் பெயரில் வங்கியில் கடன்பெற முயற்சி; கில்லாடி பெண் கைது!
உயிரிழந்த முதியவரின் சடலத்தை சக்கர நாற்காலியில் இருத்திய நிலையில் வங்கிக்கு கொண்டு சென்று அவரின் பெயரில் கடன் பெற முயன்ற பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பிரேசிலில் நேற்று முன்தினம் (17) புதன் கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் உயிரிழந்த 68 வயதுடைய முதியவரை சக்கர நாற்காலியில் அமர்த்தி வங்கிக்கு கொண்டு சென்றுள்ளார்.
பின்னர், குறித்த பெண் உயிரிழந்த முதியவரிடம் பேனாவைக் கொடுத்து, "மாமா, உங்களுக்கு கேட்கிறதா? நீங்கள் கையெழுத்திட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
எனினும் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த குறித்த முதியவர் எதுவும் பேசவில்லை.
தொடர்ந்து உங்களுக்கு உடம்பு சரியில்லை என்றால், நான் உங்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறேன் என குறித்த பெண் தெரிவித்துள்ளமை வங்கியின் காணொளி பதிவில் காட்டப்படுகின்றது.
எனினும் குறித்த பெண் கொண்டு சென்ற முதியவரின் தலை தொடர்ந்து கீழே சரிந்ததால் வங்கி ஊழியர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.
இதனால் வங்கி ஊழியர்கள் காவல்துறையினருக்கு குறித்த விடயத்தினை அறியப்படுத்திய நிலையில், சந்தேகமடைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர் ஏற்கனவே உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த பெண் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த முதியவர் உயிரிழந்தமைக்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.
இதனிடையே, தமது கட்சிக்காரர் அழைத்துச் சென்ற முதியவர், வங்கியில் வைத்தே உயிரிழந்தார் என சந்தேக நபரின் சட்டத்தரணி வாதிட்ட நிலையில், தடயவியல் பகுப்பாய்வு, அவர் முன்னதாகவே உயிரிழந்துவிட்டதை காட்டுவதாக ரொய்ட்டஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
Leave A Comment