வாக்குப்பதிவின்போது மயங்கிவிழுந்து நான்கு பேர் பலி: கேரளாவில் சோகம்
கேரளாவில் இன்று(26) மக்களவை தேர்தலுக்காக இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றபோது வாக்களிப்பதற்காக வரிசையில் நின்றபோது மயங்கிவிழுந்து நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடந்து முடிந்தது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்டமாக கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களிலும், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்திலும் இன்று நடைபெற்றது.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கேரளத்தில் பாலக்காடு, கோழிக்கோடு, ஆலப்புழா, மலப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் வாக்குப்பதிவின்போது மயங்கிவிழுந்து நால்வர் உயிரிழந்துள்ளனர்.
பலக்காடு, ஒட்டப்பாலம் அருகே உள்ள கனாங்காட்டைச் சேர்ந்த சந்திரன்(68) வாணி விலாசினி பள்ளியில் இன்று காலை வாக்களித்துவிட்டு வெளியேவரும்போது திடீரென மயங்கிவிழுந்து உயிரிழந்தார்.
கோழிக்கோடு நகர வாக்குச்சவாடியில் இடது ஜனநாயக முன்னணியின் பூத் ஏஜெண் அனீஸ் அகமது(66) வாக்குப்பதிவின்போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
ஆலப்புழா தொகுதியின் சோமராஜன்(70) அம்பலப்புழாவில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்றபோது மயஙகிவிழுந்து உயிரிழந்தார். அதேபோன்று மலப்புரம், திரூரைச் சேர்ந்த சித்திக்(63) நிறைமருதூர் அருகே உள்ள வாக்களித்துவிட்டு வீடு திரும்பிய சிறிது நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
Leave A Comment