OLYMPIC 2024: இலங்கை கால்பந்தாட்ட அணி தகுதியிழப்பு - FIFA அறிவிப்பு!
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளத்தின் மீதான தடையின் எதிரொலியாக நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடர் உள்ளிட்ட இரு சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் தகுதியை இலங்கை ஆடவர் கால்பந்தாட்ட அணி தகுதியிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஆடவர் கால்பந்தாட்ட அணி, முக்கியமான இரு போட்டிகளின் தகுதிகாண் சுற்றுகளில் பங்கேற்பதற்கான தகுதியை இழந்துள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனத்துக்கு, சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் (FIFA) அறிவித்துள்ளது.
இலங்கையின் ஆடவர் கால்பந்தாட்ட அணி, 2024 பாரிஸ் ஒலிம்பிக் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான ஆசிய தகுதிகாண் போட்டி மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் 23 வயதுக்குட்பட கத்தார் ஆசியக் கிண்ணத் தகுதிகாண் போட்டி ஆகியவற்றில் பங்கேற்க தகுதி இழந்துள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்புரிமையை, கடந்த ஜனவரி 21 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தியுள்ளது.
அதன்படி, அந்தத் தடை நீங்கும் வரை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் எந்தொரு சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டது.
விளையாட்டுத்துறை அமைச்சரால் நடத்தப்பட்ட தேர்தலில் மூன்றாம் தரப்பின் தலையீட்டை இடம்பெற்றதாக, இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, எதிர்வரும் மே 25 ஆம் திகதி குறித்த போட்டிகளுக்கான அட்டவணை தயாரிக்கப்படவுள்ளதாகவும் அதில் இலங்கை ஆடவர் கால்பந்தாட்ட அணி இடம்பெறாது எனவும் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்தை ஏற்க மறுத்துள்ள சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் (FIFA) இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) உறுப்புரிமையை தற்காலிகமாக இரத்து செய்திருந்ததுடன், கடந்த ஜனவரி 21ஆம் திகதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும் என அந்த சம்மேளனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு எதிரான சர்வதேச கால்பந்து தடைக்கு ஆதரவாக 197 நாடுகள் வாக்களித்திருந்தன.
விளையாட்டு அமைச்சின் முறையற்ற செல்வாக்கு, விளையாட்டு சுதந்திரத்தை மீறுதல், தன்னிச்சையாக புதிய விதிமுறைகளை விதித்தல் போன்ற காரணங்களால் பல நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்தன.
இந்த தடையின்படி, இலங்கை மற்றும் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த வீரரும், பயிற்றுவிப்பாளரும் அல்லது அதிகாரியும் சர்வதேச போட்டிகளிலோ அல்லது வேறு எந்த போட்டிகளிலோ பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது ஒலிம்பிக் உள்ளிட்ட இரு சரவ்தேச தொடர்களில் பங்கேற்கும் தகுதியை இலங்கை ஆடவர் கால்பந்தாட்ட அணி இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave A Comment