• Login / Register
  • செய்திகள்

    சென்னை விமான நிலையத்தில் ஏழு மணி நேரம் காத்திருந்த இளையராஜா

    மோசமான வானிலை காரணமாக புறப்பட இருந்த விமானம் தாமதமானதால் இசையமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இளையராஜா சென்னை விமான நிலையத்தில் 7 மணி நேரம் காத்திருந்தாா்.

    சென்னையில் பெய்த கனமழை காரணமாக சென்னை விமானநிலையத்துக்கு வரவேண்டிய விமானங்கள் சனிக்கிழமை இரவு பெங்களூா் உள்ளிட்ட சில முக்கிய நகரங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன.

    இந்தநிலையில் சனிக்கிழமை ஹங்கேரிக்குச் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்த இளையராஜா பயணிக்கவிருந்த ஐக்கிய அமீரகத்தின் எமிரேட்ஸ் விமானம் இரவு 9 மணிக்குப் புறப்படுவதாக இருந்தது.

    ஆனால் மழையினால் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் இரவு 9 மணிக்குப் பதிலாக தாமதமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.45 மணிக்குச் சென்னையில் இருந்து புறப்பட்டுச்சென்றது. இரவு 9 மணி விமானத்துக்கு 7 மணிக்கே வந்து காத்திருந்த இளையராஜா, மழையின் காரணமாக விமானம் மேலும் தாமதமானதைத்தொடா்ந்து சென்னை விமான நிலையத்தில் சுமாா் 7 மணி நேரம் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஹங்கேரிக்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக செல்ல வேண்டிய அவா், எம்.பி, என்பதால் விஐபி பகுதியில் காத்திருந்தாா். இந்த விமானத்தில் முதலில் துபை சென்று அங்கிருந்து மற்றொரு விமானத்தில் ஹங்கேரிக்கு செல்ல திட்டமிட்டிருந்தாா்.

    Leave A Comment