• Login / Register
  • செய்திகள்

    சிட்னி கத்திக் குத்து; பலி எண்ணிக்கை உயர்வு - இலங்கையில் இருந்து சென்றவரும் பலி!

    அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள வணிக வளாகத்தில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் ஆறு பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் இலங்கையில் இருந்து சென்றவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    அவுஸ்திரேலியாவின் சிட்னி வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் (13) சனிக்கிழமை இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் ஐந்து பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

    குறித்த கத்திக்குத்து சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

    இது மிகவும் பரிச்சயமான வணிக நிலையம் என்றும், மனித உயிர்கள் பலியாகியுள்ளது மற்றும் பலர் காயம் அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் பிரதமர் கூறினார்.

    உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

    தாக்குதல் நடத்தியவரை தடுக்க முயன்ற மக்களுக்கு பிரதமர் பாராட்டும், நன்றியும் தெரிவித்தார்.

    இதற்கிடையில், இந்த தாக்குதலில் இறந்த பலரின் அடையாளத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

    9 மாத குழந்தை ஒன்றின் தாயும் உயிரிழந்துள்ளதாகவும், குழந்தைக்கு பல சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    வேலை செய்த முதல் நாளிலேயே உயிரைக் கொடுக்க வேண்டிய பாகிஸ்தானிய அகதியும் இறந்தவர்களில் ஒருவர். 30 வயதான ஃபராஸ் தாஹிர், வெஸ்ட்ஃபீல்ட் ஷாப்பிங் சென்டரில் பாதுகாவலராக பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே உயிரிழந்தார்.

    கோடீஸ்வரரான ஆஸ்திரேலிய தொழிலதிபர் ஜான் சிங்கிள்டனின் மகள் டான் சிங்கிள்டனும் தாக்குதலில் உயிரிழந்தார்.

    இத்தாக்குதலில் 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் கொல்லப்பட்டதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

    இதனிடையே, கத்தியால் குத்திய சந்தேக நபரை சுட்டுக் கொன்ற நியூ சவுத் வேல்ஸ் காவல் ஆய்வாளர் எமி ஸ்காட்டின் செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

    அவர் தனது தைரியம் மற்றும் துணிச்சலுக்காகப் பாராட்டப்பட்டார் மற்றும் ஆயுதமேந்திய ஒரு மனிதனின் முகத்தில் உயிரைக் காப்பாற்றிய பெருமைக்குரியவர்.

    இந்த அதிகாரி வரவில்லையென்றால், இது பெரும் பேரழிவில் முடிந்திருக்கும் என்று காவல்துறை அமைச்சர் யாஸ்மின் கட்லி கூறினார்.

    இதேவேளை கத்திக்குத்துத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் இலங்கை ஊடாக அவுஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் அகதியும் உள்ளடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
     
    பொண்டி சந்தி வெஸ்ட்ஃபீல்டில், பாதுகாவலராகப் பணியாற்றிய 30 வயதான ஃபராஸ் தாஹிர் கத்திக்குத்துத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஒரேயொரு ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 
     
    ஃபராஸ் தாஹிர், பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில், ஐக்கிய நாடுகளின் அகதிகள் உயர்ஸ்தானிகரகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் இருந்து ஒரு வருடத்திற்கு முன்னர் அவுஸ்திரேலியா சென்றுள்ளார். 
     
    பாகிஸ்தானிய அரசியலமைப்பின் கீழ், அஹ்மதியா சமூகம் முஸ்லிம் அல்லாதவர்களாக அறிவிக்கப்பட்டு, வன்முறைத் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது. 
     
    அத்துடன், மத நம்பிக்கைகள் காரணமாக அவர்கள் தேர்தல்களிலும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதில்லை. 
     
    இந்நிலையிலேயே ஃபராஸ் தாஹிர் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி இலங்கையின் ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்துள்ளார்.

    Leave A Comment