• Login / Register
  • முகப்பு

    55,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்: சுதந்திர தின உரையில் முதல்வர்

    தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 55,000 பணியிடங்கள் நிரப்படவுள்ளது என சுதந்திரதின உரையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்திய ஒன்றியத்தின் முக்கியமான அங்கம் தமிழ்நாடு என்று தெரிவித்தார்.

    நாட்டின் சுதந்திர நாளையொட்டி, கோட்டை கொத்தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு தேசியக் கொடியேற்றினார்.

    தொடர்ந்து மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை:

    “கலைஞர் நூற்றாண்டில் கோட்டையில் கொடியேற்றுவதை பெருமை கொள்கிறேன். சுதந்திர நாளில் முதலமைச்சர் கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் கருணாநிதி.

    கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அவ்வாறு செய்தால்தான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறையை அகற்ற முடியும். ஓலா, ஸ்விக்கி போன்ற நிறுவனங்களை சார்ந்த ஊழியகளின் நலனை பாதுகாக்க தனி நலவாரியம் அமைக்கப்படும்.

    அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பெண்கள் பயணிக்கும் திட்டத்துக்கு விடியல் பயணம் என்று பெயர் சூட்டப்படுகிறது. இந்திய ஒன்றியத்தின் முக்கியமான அங்கம் தமிழ்நாடு. மூத்த மொழி தமிழ் மொழி.

    ஆட்டோ ஓட்டுநர்களாக பணிபுரியும் பெண்கள் புதிதாக ஆட்டோ வாங்குவதற்கு மேலும் 500 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

    விடுதலை போராட்ட தியாகிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 11 ஆயிரமாக அதிகரிக்கப்படுகிறது.

    ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் அனைத்து ஆரம்ப பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்படும். இந்த திட்டத்துக்கு இந்தாண்டு ரூ. 404 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 31,008 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள். மகாத்மா காந்தி, நேதாஜி, பகத் சிங், அம்பேத்கர் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் நல்லிணக்க இந்தியாவைதான் விரும்பினர்.

    பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 55,000 பணியிடங்கள் நிரப்பபடவுள்ளது.சென்னை செங்காந்தள் பூங்காவுக்கு அருகில் ரூ. 25 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படவுள்ளது.” என்று பேசினார்.

     


    Leave A Comment