மதுரை To சிங்கப்பூர் நேரடி விமான சேவை: உறுதியளித்த முதல்வர்!
மதுரை - சிங்கப்பூர் இடையே நேரடி விமான சேவை தொடங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே முதல்வர் முக ஸ்டாலின் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.
சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ பயணம் சென்றுள்ள முதல்வர் முக ஸ்டாலின் அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள தொழில் நிறுவனங்களின் அதிகாரிகளை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து மாலையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர் நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சண்முகத்தை சந்தித்து கலந்துரையாடினார்.
இச் சந்திப்பின்போது, சென்னையில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.
அப்போது சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் தமிழ்நாடு தொழில்கள், சேவை நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் போன்றவற்றில் இணையப் பாதுகாப்பை ஏற்றுக் கொள்வதற்கான ஆதரவை விரிவுபடுத்துதல் குறித்து முதலமைச்சரிடம் கலந்துரையாடினார்.
இதேபோன்று மாநில நிறுவனங்களுக்கான இணைய பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்றவற்றில் அரசு நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிப்பது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தினார்.
மேலும், சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் சண்முகம் கோரிக்கை விடுத்தார். அதற்கு மு.க. ஸ்டாலின்இ இதுகுறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
சிங்கப்பூர் பயணத்தை நிறைவு செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஜப்பான் புறப்படுகிறார்.
Leave A Comment