• Login / Register
  • முகப்பு

    9 நாட்களில் 2 நாடுகள்... முதல்வரின் வெளிநாட்டு பயண விபரம்!

    தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் இன்று காலை சிங்கப்பூருக்கு பயணமாகும் நிலையில் 9 நாட்களில் 2 நாடுகளுக்கு பயணமாக உள்ளார்.

    முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை சிங்கப்பூர் புறப்படுகிறார்.

    அடுத்தாண்டு ஜனவரி மாதம் 10, 11ம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இதையொட்டி, முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    சிங்கப்பூர் சுற்றுப்பயணம்...

    இதன்படி, சென்னையிலிருந்து இன்று காலை 11.25 மணிக்கு புறப்படும் முதலமைச்சர், முதலாவதாக சிங்கப்பூர் செல்கிறார்.

    அங்கு அந்நாட்டு போக்குவரத்து, தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரன், உள்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர் சண்முகம் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார். முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக், செம்கார்ப், கேப்பிட்டாலேண்ட் இன்வெஸ்ட்மென்ட் ஆகியவற்றின் உரிமையாளர்களை சந்தித்துப் பேசுகிறார்.

    நாளை புதன்கிழமை அன்று தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின், சிங்கப்பூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த 350 தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    முதலீட்டாளர் மாநாட்டின்போது, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், ஃபேம்டிஎன் (FameTN), டான்சிம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றுக்கும், சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக் கழகம், சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அமைப்பு, சிங்கப்பூர் இந்தியா தொழில் வர்த்தக கூட்டமைப்பு ஆகியவற்றுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கலை நிகழ்ச்சியிலும் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.

    ஜப்பான் சுற்றுப்பயணம்...

    இதனைத் தொடர்ந்து, வரும் 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை ஜப்பான் நாட்டில் முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    அங்கு முன்னணி தொழில் துறைத் தலைவர்கள், அரசு அதிகாரிகளையும் சந்தித்து உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்க உள்ளார். அங்கு நடைபெறும் முதலீட்டு ஊக்குவிப்பு மாநாட்டில், பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

    முதல்முறையாக ஒசாகா நகருக்கு முதலமைச்சர் தலைமையிலான குழு செல்ல உள்ளது. ஜெட்ரா நிறுவனத்துடன் இணைந்து முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் கலந்துகொள்கிறார். முக்கிய நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார்.

    ஒசாகா வாழ் இந்திய சமூகத்தினர் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள உள்ளார்.

    தலைநகர் டோக்கியோவில் தொழில் துறை அமைச்சர் நிஷுமுரா யசுதோஷி, ஜெட்ரோ தலைவர் இஷிகுரோ நொரிஹிகோ ஆகியோரை சந்திக்கிறார்.

    200-க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் கலந்துகொள்ளும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் பங்கேற்று, கியோகுடோ, ஓம்ரான் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட உள்ளன.

    அங்குள்ள மேம்பட்ட தொழில் மையத்தையும் முதலமைச்சர் பார்வையிடுகிறார்.

    முதலமைச்சருடன் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் உயர்அதிகாரிகளும் செல்கின்றனர்.

    9 நாட்கள் சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தை முடித்துவிட்டு வருகிற 31ஆம் தேதி மீண்டும் முதலமைச்சர் தமிழ்நாடு திரும்புகிறார்.

    Leave A Comment