• Login / Register
  • முகப்பு

    ஈரோடு கிழக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணி இன்று வியாழக்கிழமை (மார்ச் 2) சற்று முன்னதாக ஆரம்பமாகியுள்ளது.

    இந்தத் தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளதால் முடிவுகள் தாமதமாக வாய்ப்புள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த 27ம் திகதி வாக்குப்பதிவு இடம்பெற்றிருந்த நிலையில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி சற்று முன்னதாக ஆரம்பமாகியுள்ளது.

    15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை இடம்பெற உள்ள நிலையில் காலை 9.00 மணியளவில் முதல்சுற்று முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஈரோடு கிழக்கு பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானதைத் தொடர்ந்து, இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ். இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்பட 77 பேர் போட்டியிட்டனர்.

    வாக்குப் பதிவு பிப்.27 -ஆம் தேதி நடைபெற்றது. வாக்குப் பதிவு சதவீதம் 74.79.

    வாக்குப் பதிவு முடிந்தவுடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் "சீல்' வைக்கப்பட்டு, சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டன. அங்கு ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகியது. முதலில் தபால் வாக்குகளும், அதைத் தொடர்ந்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

    16 மேஜைகளில் 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. "77 வேட்பாளர்கள் போட்டியிடுவதன் காரணமாக, தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்படும். பிற்பகலுக்குப் பிறகுதான் முடிவுகள் தெரியவரும். இறுதி முடிவுகள் அதிகாரபூர்வமாக மாலையில் அறிவிக்கப்படும்' என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Leave A Comment