• Login / Register
  • சோதிடம்

    சனி பெயர்ச்சி எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்..?

    இதுவரை ஏழரை சனி நடைபெற்றுக் கொண்டிருந்த ராசிக்காரர்களுக்கு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2020ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே அதாவது ஜனவரி மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற சனி பெயர்ச்சியின் பொழுது ஏழரை சனி நீங்க பெற்றது.

    இருப்பினும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நாளையோடு முற்றிலுமாக சனி பகவானுடைய தாக்கம் உங்களுக்கு விலக இருக்கிறது. இனிவரும் காலங்களில் உங்களுடை வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.

    இந்த வகையில் யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

    பொதுவாகவே திருக்கணித பஞ்சாங்கத்திற்கும், வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் ஒரு மாத இடைவெளியில் பெயர்ச்சிகள் நடக்கும். ஆனால் இவ்வருடம் 11 மாத இடைவெளிக்குப் பிறகு சனிப்பெயர்ச்சி மீண்டும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நாளை நடைபெற இருக்கிறது. இதனால் பல்வேறு மக்களுக்கும் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. திருக்கணிதம் மற்றும் வாக்கிய பஞ்சாங்கம் எதுவாக இருந்தாலும் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம் பெயரும் சனி பகவனால் குறிப்பிட்ட இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியால் கஷ்டங்களை கொடுப்பார்.

    சனி பகவான் எந்த ராசியில் சென்று அமர்கிறார்? என்பதை பார்க்க வேண்டும். அதற்கு முன்னுள்ள ராசியும், பின்பு உள்ள ராசியையும், அவர் அமர்ந்திருக்கும் அந்த குறிப்பிட்ட ராசிக்காரர்களையும் பிடித்துக் கொள்வார். இதைத்தான் ஏழரை சனி என்கிறோம்.

    இப்போது தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு செல்லும் சனிபகவானால் தனுசு ராசி, மகர ராசி மற்றும் அதற்கு பிறகு வரும் கும்ப ராசி இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் ஏழரை சனி ஆரம்பிக்க இருக்கிறது. இவர்கள் சனி பரிகாரம் செய்து கொள்வது மிகவும் நல்லது. தினமும் காக்கைக்கு உணவு அளித்து விட்டு சாப்பிடுங்கள்.

    சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை வருட காலம் சஞ்சாரம் செய்வார். இந்த காலத்தில் ஏழரைச் சனியின் ஆதிக்கம் உள்ள ராசிகளுக்கு பல்வேறு பிரச்சினைகளை கொடுப்பார். அவர்களுடைய பாவ-புண்ணிய கணக்கின் படி நல்ல விஷயங்களும், கெட்ட விஷயங்களும் மாறி மாறி நிகழும்.

    சாதாரண சனியை விட, ஏழரை சனி என்றாலே மிகவும் கலக்கம் தரும் விஷயம் தான். ஏழரை சனியின் பிடியில் இருப்பவர்கள் உறவு சிக்கல்களையும், பண ரீதியான பாதிப்புகளையும் அடைவார்கள். இவர்களுக்கு மனம் தெளிவாக இருக்காது. இந்த சமயத்தில் மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு எந்த ஒரு முடிவையும் எடுப்பது மிகவும் நல்லது.

    ஏழரை சனியில் இருந்து விடுபடப்போகும் விருச்சிக ராசியினர்

    தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்த சனிபகவான் விருச்சிக ராசியை ஏழரை சனியில் இருந்து விடுவிக்கிறார். இதனால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசியாக இருப்பது ‘விருச்சிக ராசிக்காரர்கள்’ தான். விருச்சிக ராசிக்காரர்களுக்கு இதுவரை நடந்த அத்தனை கஷ்டங்களும், துன்பங்களும் தீரும் காலம் இது. நாளையுடன் உங்களுக்கு ஏழரை சனி முடிவடைய இருப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் அமோக வெற்றி உண்டாகும். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடிவரும்.

    விருச்சிக ராசிக்காரர்களுக்கு இதுவரை வாழ்க்கையில் அடிமேல் அடியை கொடுத்திருப்பார். எதற்காக இந்த வாழ்க்கையை வாழ்கிறோம்? என்கிற விரக்தியில் இருந்திருப்பீர்கள். ஆனால் நம்பிக்கையுடன் காத்திருந்ததற்கு இனி நல்ல பலன் கிடைக்க இருக்கிறது. நீங்கள் தொடங்க இருக்கும் புதிய முயற்சிகளில நிச்சயமாக சாதகமான பலன்கள் அமையும் என்பதால் நம்பிக்கையுடன் தொடங்கலாம். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகளும் உண்டாகும். மனதில் இருந்த அழுத்தங்கள் நீங்கி புது உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். இந்த சனி பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தரும் பெயர்ச்சியாகவே அமைய இருக்கிறது என்பதைக் கூறி இப்பதிவை முடித்துக் கொள்வோம்.

    Leave A Comment