• Login / Register
  • செய்திகள்

    2026-இல் ஆட்சி; பிரிந்தவர்களை இணைக்க ஆலோசனை - கைகூடுமா இபிஎஸ் வியூகம்?

    2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை இலக்கு வைத்து அதிமுக வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கருத்துகள் கட்சிக்குள் வலுவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    முன்னாள் முதர்வர் ஓ.பன்னீர்ச்செல்வம் மற்றும் முன்னாள் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா போன்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் கட்சி முக்கியஸ்தர்கள் கரிசனை காட்டியுள்ள நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் முடிவு தொடர்பில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் இத்தேர்தலை எதிர்கொண்ட அதிமுக நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. அத்துடன் 7 இடங்களில் டெபாசிட் இழந்தது அதிமுக.

    இந்த தோல்விக்கான காரணம் குறித்து, முதற்கட்டமாக 8 நாட்களில் 23 தொகுதிகளின் நிர்வாகிகளை சந்தித்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது, பெரிய கூட்டணி இல்லை என்பதையே பலரும் பிரதானமாக முன்வைத்ததாக கூறப்படுகிறது.

    ஆனால், கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம் என கூறிய எடப்பாடி பழனிசாமி, பெண்கள், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இதனிடையே, பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்டோரை அதிமுகவில் இணைப்பது குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்ட நிலையில், சில மாவட்ட நிர்வாகிகளும் அதை வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.

    இதனிடையே, 2-ஆவது கட்டமாக 17 தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 24-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சட்டப்பேரவைத் தேர்தல் தான் முக்கியம் என கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, இந்த ஆய்வுக் கூட்டங்களுக்குப் பிறகு அதற்கான அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்குவாரா? பிரிந்தவர்கள் இணைவது சாத்தியப்படுமா? அல்லது ஒருங்கிணைப்பு என்ற பேச்சு காற்றிலேயே கரையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    Leave A Comment