• Login / Register
  • செய்திகள்

    புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்புவிழா சர்ச்சை; பொதுநல வழக்கு தாக்கல்

    புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை வழக்கறிஞர் சி.ஆர் ஜெய சுகின் என்பவர் தொடுத்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறப்பது தொடர்பாக மக்களவை செயலகத்துக்கு ‘வழிகாட்டுதல் அல்லது ஆலோசனை’ வழங்க வேண்டும் என நீதிமன்றத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    கடந்த 18-ம் தேதி மக்களவை செயலக ஜெனரல் வெளியிட்ட அறிக்கையில் வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த விழாவிற்கு குடியரசு தலைவருக்கு அழைப்பு கூட கொடுக்கப்படவில்லை. இதன் மூலம் மக்களவை செயலகம் அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயலில் ஈடுபட்டுள்ளது எனவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

    தனது மனுவில் அரசியலைமைப்பின் 79-வது பிரிவையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டும் மற்றும் ஒத்திவைக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் தொடங்கி அனைவரையும் நியமிப்பதும் குடியரசுத் தலைவர்தான் என அவர் தெரிவித்துள்ளார். 

    சுமார் 20 எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்புவிழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.. 

    Leave A Comment