மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு; அவகாசம் இன்றுடன் நிறைவு!
தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்று புதன் கிழமையுடன் (15) முடிவடைகிறது.
வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோர் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் தமிழக மின்வாரியம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டது. இந்த பணிகள் நவம்பரில் தொடங்கிய நிலையில், டிசம்பர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
பலர் இணைக்காத நிலையில், கால அவகாசம் ஜனவரி 31 வரையும் பின்னர் பிப்ரவரி 15 ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டது.
லட்சக்கணக்கானோர் மின் வாரிய அலுவலகத்தில் நேரிலும், இணையம் வழியாக ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்தனர்.
இந்த நிலையில் இனியும் கால அவகாசம் வழங்கப்படாது என்றும், மின் இணைப்பை ஆதாருடன் இணைக்காதோர் இன்றைக்குள் இணைத்துக் கொள்ள வேண்டும் எனவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்தவர்கள் மட்டுமே மின் கட்டணம் செலுத்த முடியும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனிடையே, மின்வாரிய இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை அளித்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை நுகர்வோர்கள் சரிபார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave A Comment