கல்லறை திருநாள் இன்று: வேளாங்கண்ணியில் திரண்ட பக்தர்கள்
இறந்தவர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்றைய நாள் கல்லறை திருநாளாக கிறிஸ்துவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
கல்லறைத் திருநாளையொட்டி உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி வியாழக்கிழமை நடைபெற்றது. திருத்தல அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
கல்லறை திருநாள் நிகழ்வில் பங்கேற்ற கிறிஸ்துவர்கள், பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்ட பாதிரியார்கள் மற்றும் தங்களுடைய உறவினர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்தனர். தொடர்ந்து, கல்லறைகளில் உணவுப்பண்டங்களை படையலிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
பின்னர், இஸ்ரேல்-பாலஸ்தீன இடையே நடைபெறும் போரில் உயிர் நீத்தவர்களின் ஆன்மா சாந்தியடைய சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் 2004 -ஆம் ஆண்டு சுனாமி பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் நினைவு ஸ்தூபியில் வேளாங்கன்னி பேராலயத்தின் சார்பில் கல்லறைத் திருநாள் வழிபாடு நடைபெற்றது.
வேளாங்கண்ணி பேராலயத்தில் நடந்த கல்லறை திருநாளில் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் பங்கேற்றனர்.
Leave A Comment