• Login / Register
  • முகப்பு

    குண்டுத்தாக்குதல் தகவல்; வவுனியாவில் பாடசாலைகளுக்கு தீவிர பாதுகாப்பு!

    மாணவர்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதலை மேற்கொள்ள குண்டுதாரிகள் நடமாடிவருவதாக வழங்கப்பட்ட தகவலை அடுத்து வவுனியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

    வவுனியா - இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலயத்திற்கு இன்று (25)  சென்ற இருவர் தம்மை பொலிஸார் என அடையாளப்படுத்தியதுடன், பாடசாலையின் காவலாளியை அழைத்து மாணவர்களை இலக்கு வைத்து இந்த பகுதிக்குள் இரண்டு குண்டுதாரிகள் நடமாடித் திரிவதாகவும், இதனால் மாணவர்களை கூட்டமாக வெளியில் நடமாடித்திரிய வேண்டாம் எனவும் கூறிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் கடமையில் இருந்த காவலாளி குறித்த தகவலை பாடசாலையின் அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக பாடசாலை அதிபர் தெரிவிக்கையில், பொலிஸார் என அடையாளப்படுத்திய இருவர் குறித்த தகவலை காவலாளியிடம் கூறிச் சென்றதை உறுதிப்படுத்தியிருந்தார். அதேநேரம், வவுனியா பொலீசாரால் குறித்த சம்பவம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக தனக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

    இதையடுத்து அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டிருந்தது.

    இதேவேளை, குறித்த குண்டுத்தாக்குதல் தகவலை அடுத்து வவுனியா நகரில் உள்ள பாடசாலைகளுக்கு பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதையிட்டு யாரும் அச்சமடையத் தேவையில்லை என வவுனியா தலைமைப் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

    Leave A Comment