• Login / Register
  • முகப்பு

    தமிழின அழிப்பு நாள் அறிக்கை; கனடா பிரதமருக்கு இலங்கை கண்டனம்!

    முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 14-வது ஆண்டை முன்னிட்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விடுத்துள்ள அறிக்கைக்கு இலங்கை அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

    இனப்படுகொலைக்குள்ளான ஈழத்தமிழர்களுக்கு கனடா எப்போதும் ஆதரவாக இருக்கும் எனவும் ஈழத்தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் குறித்து கனேடிய மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீண்டும் கனடாவுடனான இராஜதந்திரப் போரில் இறங்கியுள்ளது.

    உள்நாட்டில் நல்லிணக்கச் செயற்பாட்டிற்கு உதவாது எனக் கருதும் கனேடிய பிரதமரின் அறிக்கையை இலங்கை கண்டிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

    கனேடிய பிரதமர் தனது அறிக்கையில்,

    இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்த ஆயுதப் போரின் போது ஏற்பட்ட துயரமான உயிர் இழப்புகளை நாங்கள் சிந்திக்கிறோம்.

    முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர்.

    மேலும் பலர் காணாமல் போனவர்கள், காயமடைந்தவர்கள் அல்லது இடம்பெயர்ந்தனர்.

    நமது எண்ணங்கள் பாதிக்கப்பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்கள், இந்த அர்த்தமற்ற வன்முறையால் ஏற்படும் வலியுடன் தொடர்ந்து வாழ்கிறார்கள் என்று கனேடிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

    இதன்காரணமாகவே கடந்த ஆண்டு கனேடிய நாடாளுமன்றம் மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக பிரகடனப்படுத்தும் பிரேரணையை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது என்றும் கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

    மதம், நம்பிக்கை மற்றும் பன்மைத்துவ சுதந்திரத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானங்களை இலங்கை  ஏற்றுக்கொள்வது என்பது எதிர்வரும் ஆண்டுகளில், அந்த நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கான அத்தியாவசிய கூறுகளாகும்.

    இந்தநிலையில் உலகெங்கிலும் உள்ள மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பணியைத் தொடருவோம் என்று தெரிவித்துள்ள கனேடிய பிரதமர், மனித உரிமை மீறல்களுக்கு பதிலளிக்கும் வகையில், நான்கு இலங்கை அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக தமது அரசாங்கம் தடைகளை விதித்தது என்று நினைவூட்டியுள்ளார்.

    இதேவேளை கனடா அரசாங்கத்தின் சார்பாக, தமிழ்-கனடியர்கள், நாட்டிற்கு ஆற்றிய பல பங்களிப்புகளை அங்கீகரிக்க அனைத்து கனேடியர்களையும் தாம் அழைப்பதாக கூறியுள்ள அவர், இலங்கையின் ஆயுத மோதலின் தாக்கம் பற்றி அனைவரும் அறிந்துக்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

    அத்துடன் இலங்கையில் பாதிக்கப்பட்ட அல்லது அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் ஒற்றுமையை வெளிப்படுத்துங்கள் என்றும் அவர் கனேடிய மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment