• Login / Register
  • விளையாட்டு

    ராகுல் நிதான ஆட்டம்; ஒருநாள் தொடரும் இந்தியா வசம்!

    சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் வெற்பெற்றதன் மூலம் தொடரை கைப்பற்றியது இந்திய அணி.

    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 215 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    அந்த அணியில் அதிகபட்சமாக நுவனிது ஃபெர்னாண்டோ 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியின் தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பறினர். உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

    இதனையடுத்து, 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது இந்திய அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சிறப்பான தொடக்கத்தை தர முயற்சி செய்தனர். இருப்பினும், கேப்டன் ரோஹித் சர்மா 17 ரன்களிலும், ஷுப்மன் கில் 21 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

    முதல் ஒருநாள் போட்டியில் அதிரடியாக சதமடித்த விராட் கோலி இன்றையப் போட்டியில் 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன் பின் ஸ்ரேயஸ் ஐயர் 28 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 14.2 ஓவர்களில் 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இந்த நிலையில், கே.எல்.ராகுல் மற்றும் ஹார்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை விக்கெட்டைப் பறிகொடுக்காமல் மிகவும் நிதானமாக விளையாடியது. இருப்பினும், இந்த பார்ட்னர்ஷிப்பை சமீகா கருணரத்னே உடைத்தார். அவர் ஹார்திக் பாண்டியாவை 36 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார்.

    இதனையடுத்து, அக்சர் படேல் களமிறங்கினார். நிதானமாக விளையாடிய அக்சர் படேல் 21 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் போனாலும் ஒருபுறம் கே.எல்.ராகுல் நிதானமாக விளையாடி அணியினை வெற்றி இலக்கை நோக்கி நகரச் செய்தார். 

    அதன்பின், கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்தார் குல்தீப் யாதவ். இருவரும் நிதானமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்திய அணி 43.2 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 219 ரன்களை எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

    நிதானமாக விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த கே.எல்.ராகுல் 64 ரன்கள் குவித்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும்.

    பந்துவீச்சில் லகிரு குமார மற்றும் கருணாரத்னே ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரையும் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment