• Login / Register
  • செய்திகள்

    தமிழகத்தில் 'கஞ்சிப்பாணி இம்ரான்'; உளவுத்துறை எச்சரிக்கை!

    இலங்கையில் திட்டமிட்ட குற்றக் கும்பல் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் தலைவன் என அழைக்கப்படும் 'கஞ்சிபானி இம்ரான்' எனும் முகமது நஜீம் முகமது இம்ரான் இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    'தி இந்து' நாளிதழ் குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

    டிசம்பர் 25 ஆம் திகதி ராமேஸ்வரம் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையில் கஞ்சிபானி இம்ரானும் அவரது சகாவும் இறங்கியதாகவும், இது தொடர்பாக அவதானமாக இருக்குமாறு மாநிலம் முழுவதும் உள்ள சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளை உளவுத்துறை எச்சரித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கொலை, கொலை அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த இம்ரான், கடந்த 2019ம் ஆண்டு டுபாயில் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்டு, தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்பிலான இரண்டு சரீர பிணைகளில் கடந்த 20ம் திகதி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

    பிணையில் வெளிவந்த இம்ரான் இந்தியாவுக்குள் நுழையத் திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்புகள் மற்றும் நம்பகமான ஆதாரங்களில் இருந்து தமிழக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக த ஹிந்து தெரிவித்துள்ளது.

    கஞ்சிபானி இம்ரான் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றது குறித்து இலங்கை இன்னும் குறிப்பிட்ட பதிலை அளிக்கவில்லை என்றும், இந்திய புலனாய்வு அமைப்புகள் கஞ்சிபானி இம்ரான் தங்கள் நாட்டுக்குள் நுழைந்தமை குறித்த உண்மைகளை நம்பகமான ஆதாரங்கள் மூலம் உறுதி செய்துள்ளதாகவும் 'தி இந்து' சுட்டிக்காட்டுகிறது.

    Leave A Comment