• Login / Register
  • செய்திகள்

    திருகோணமலை தாக்குதல் தமிழ்த் தேசியத்தின் அவமானம் - யோதிலிங்கம்!

    தியாக தீபம் திலீபன் உருவப்படம் தாங்கிய நினைவு ஊர்தி மீது சிங்கள காடையர்கள் திருகோணமலையில் வைத்து மேற்கொண்ட தாக்ககுதலானது தமிழ்த் தேசியத்தின் அவமானமாகும் என அரசியல் ஆய்வாளர் சி.அ யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

    தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு பொத்துவில் - நல்லூர் வரை ஊர்திப் பவனி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் திருகோணமலை கப்பல்துறை பகுதியில் வைத்து வழிமறித்த சிங்களக் காடையர்கள் ஊர்தி மீதும் அதில் பயணித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் மீதும் காட்டு மிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டது.

    இத் தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவத்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

    திலீபனுடைய நினைவுத்தூபி திருகோணமலையில் வைத்து தாக்கப்பட்டுள்ளது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்று கூட பார்க்காமல் செல்வராசா கஜேந்திரனையும் தாக்கியுள்ளனர். இது மிகவும் மோசமான இனவெறியென்றே நாங்கள் கூற வேண்டும்.
     
    பெரும் தேசியவாதத்தினுடைய உண்மை நிலையை இன்றைக்கு பார்ப்பதற்குக்கான வாய்ப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியிருப்பதாகவும் ஆயுத போராட்டத்தினுடைய  உண்மை தன்மையை இது நிரூபிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், அகிம்சை வழியில் போராடிய ஒருவருடைய நினைவு ஊர்த்தியை சகித்துக்கொள்ள முடியாதவர்கள் தமிழ் மக்களினுடைய அரசியல் அபிலாசைகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்று நாங்கள் எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என்ற கேள்வியையும் இது எழுப்பியுள்ளது.

    இந்த நிகழ்விலே அவமானத்துக்கு உட்படுத்தப்பட்டது திலீபனோ கஜேந்திரனோ கிடையாது தமிழ் தேசியமே அவமானப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தை சேர்ந்தவர்களாகிய நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், இவ்வாறான போராட்டங்களை நடத்துகின்ற போது ஒரு அரசியல் கட்சி தனித்து நடத்துவது பொருத்தமல்ல என்றும் வேறு கட்சிகளையும் இணைத்துக்கொண்டு செயற்பட்டால் இவ்வாறான அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் வலுவான விடையங்களை மக்களுக்கு சொல்ல முடியும் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதிலே சற்று தவறு இழைத்துள்ளது என்றே கூறவேண்டும் என தெரிவித்துள்ளார்.

    மேலும், எதிர்வரும் காலங்களில் திலீபனுடைய தினத்தை பேரெழுச்சியாக நடத்த இப்போதே தயாராக வேண்டும். நினைவு கூறுவது என்னவென்றால் ஒரு விடையத்தினை கடத்துவதாகும் என்றும் உண்மைகளை கொண்டு வருவதற்கான ஒரு படியாகும். ஏனையவர்கள் இவற்றில் அக்கறை செலுத்தாத போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி இவற்றில் அக்கறை செலுத்துவதை நாம் பாராட்ட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

    தலைவர்கள் முன்னே மக்கள் பின்னே என்று சொன்னார்கள் இன்று தலைவர்கள் பின்னே வருவதற்கு கூட தயங்கும் நிலைமை காணப்படுவதாக கூறியுள்ளார் ஆகவே எதிர்காலத்திலாவது ஒருங்கினைந்த செயற்பாட்டினை கொண்டு நகர்வதற்கு திட்டங்களை வகுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    இன்று கிழக்கு மாகாண தமிழ் மக்கள் பாதுகாப்பற்று இருக்கின்றார்கள் என்றும் கிழக்கு மாகாணத்தில் இருந்து மக்கள் எழுச்சியடைந்து அவர்கள் இதற்கு எதிராக குரல் கொடுக்க வருகின்றபோது தான் என்னவர்கள் அவர்களுக்கு உதவிகளை வழங்க முடியும்.

    முல்லைத்தீவில் இடம் பெற்ற காணி தொடர்பான பிரச்சனைகளுக்கு முல்லைத்தீவு அரசியல் சக்திகள் தாங்களாக முன்வந்து போராட்டங்களை மேற்கொண்டார்கள். இவ்வாறு கிழக்கில் ஏன் செய்ய முடியவில்லை என கேள்வியெழுப்பியுள்ளார்.

    மேலும், பெரும் தேசியவாதம் தன்னுடைய செயற்பாடுகளை தொடர்ச்சியாக செய்து கொண்டு தான் இருக்கும் அந்த ஆக்கிரமிப்பு எதிராக நாங்கள் போராட வில்லை என்று சொன்னால் அவர்கள் முமுமையான ஆக்கிரமிப்புக்ளை செய்வதற்கு நாங்களே வழிவகுத்து கொடுப்பது போல இருக்கும் என தெரிவித்துள்ளார்.

    ஆகவே எவ்வாறான பிரச்சனைகள் வந்தாலும் அவற்றை எதிர்த்து முன்னேறுவதே சிறந்தது என தெரிவித்துள்ளார்.

    Leave A Comment