நடுக்கடலில் இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு - இராமேஸ்வரம் மீனவர்கள் குற்றச்சாட்டு!
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மீன் பிடிக்கவிடாது துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டியடித்ததாக இலங்கை கடற்படை மீது இராமேஸ்வரம் மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று (18) திங்கட்கிழமை சுமார் 424 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
நேற்று மாலை தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே இராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட அதி நவீன ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிப்பதாக ஒலி பெருக்கி மூலம் எச்சரித்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் கைது நடவடிக்கைக்கு அஞ்சி நடுக்கடலில் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இதையடுத்து இன்று (19) காலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்களை விரட்டியடித்ததுடன், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கைது செய்வதாக மிரட்டியதாக இலங்கை கடற்படை மீது இராமேஸ்வரம் மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இவ்வாறு நடுக்கடலில் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் இலங்கை கடற்படை தொடர்ந்து விரட்டியதால் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் கரை திரும்பியதாகவும், இதனால் படகு ஒன்றுக்கு சுமார் 70ஆயிரம் ரூபா வரை நஷ்டத்துடன் இன்று (19) காலை கரை திரும்பியதாக இராமேஸ்வரம் மீனவர்கள் மேலும் தெரிவித்தனர்.
Leave A Comment