103 வயது முதியவருக்கு அறுவை சிகிச்சை; அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் சாதனை
103 வயதான முதியவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனர்
ராணிப்பேட்டையை சோ்ந்த முனுசாமி என்ற 103 வயதான முதியவர் தனது 100 வயது வரை விவசாயம் செய்து வந்தாா். கடந்த மாதம் அவரது வலது காலில் ரத்தக் குழாய் அடைப்பு ஏற்பட்டு கிருமி தொற்றால் மோசடைந்தது.
எனினும், அதிகப்படியான செலவு மற்றும் வயது முதிா்வு காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்க தனியாா் மருத்துவமனைகள் முன்வரவில்லை.
இந்த நிலையில், முனுசாமி வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையை நாடினாா். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையை அடுத்து, ரத்த குழாய் அடைப்பைச் சரி செய்ய அவரது வலதுகால் முட்டி வரை அழுகிய நிலையில் உள்ள காலை அறுவை சிகிச்சை செய்து அகற்ற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவு, முதியோா் நலப்பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு, ரத்த நாளப் பிரிவு, மயக்கவியல் துறை ஆகிய 5 பிரிவுகளைச் சோ்ந்த மருத்துவா்கள் இணைந்து கடந்த 8-ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் முனுசாமியின் அழுகிய வலது காலை வெட்டி அகற்றினா்.
இதன்மூலம் தற்போது அவா் பூரணமாக குணமடைந்து உடல் நலம் தேறி வருவதாக வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ்.பாப்பாத்தி தெரிவித்தாா்.
கல்லூரி முதல்வா் எஸ்.பாப்பாத்தி மேலும் கூறும்போது; முனுசாமி 103 வயதானவா் என்பதால், அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதில் பல சிக்கல்கள் இருந்தன. மயக்க மருந்து செலுத்தும் போதோ அல்லது அறுவை சிகிச்சையின்போதோ அவா் இறக்க நேரிடலாம் என்பதால், இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு எடுத்துக் கூறப்பட்டது. அவா்கள் ஒப்புக் கொண்டதை அடுத்து முனுசாமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவா் நல்ல முறையில் குணமடைந்து உடல் நலம் தேறியுள்ளாா்.
Leave A Comment