• Login / Register
  • செய்திகள்

    கள்ளச் சாரய தர்பார் நடத்தும் திமுக; 2 ஆண்டு ஆட்சியில் வேதனையே மிச்சம் - ஜெயக்குமார்!

    கள்ளச் சாராய தர்பார் நடத்தும் திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் தலைவிரித்தாடுகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    திமுக அரசின் 2 ஆண்டு ஆட்சி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பில் டி ஜெயக்குமார் மேலும் தெரிவிக்கையில்,

    2 ஆண்டு திமுக ஆட்சியில் வேதனையே மிச்சம்...

    ஈராண்டு ஆட்சி... தமிழகத்தின் இருண்ட ஆட்சியே அதற்குச் சாட்சி. சட்டம் - ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. சாதாரணமாக பத்திரிகைகளைத் திருப்பினாலே கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து, ஆள் கடத்தல், அதிகாரத் துஷ்பிரயோகம், எதிர்கட்சியினரை பழிவாங்குவது, ஜனநாயகத்தின் குரல்வளையை நெருக்குவது, பொய் வழக்குப் புனைவது என வரிசை கட்டுகிறதே... இதில் சாதனை என்ன இருக்கிறது? வேதனையே மிஞ்சி இருக்கிறது.

    அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாட்டை இப்படி ஆக்கிவிட்டார்களே....

    மக்களைப் பொறுத்தவரை ஒரு ஆட்சியின் மதிப்பீட்டை நிம்மதியாக இருக்கும் அளவீட்டை வைத்தே தீர்மானிப்பார்கள். முந்தைய அதிமுக ஆட்சியில் அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை இன்று எப்படி ஆக்கியிருக்கிறார்கள்?

    பைக்கில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் இன்று காரில் வந்து செயின் பறிக்கிறார்கள். தனியாக இருக்கும் முதியோரைக் குறிவைத்து அவர்கள் வீடுகளில் கொள்ளை நடக்கின்றது.

    காவல்துறைக்கு தலைகுணிவை தந்த திமுக ஆட்சி...

    தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக இருந்தது. இப்போது காவலர்களே, ஏன் இந்தக் காக்கிச் சட்டையைப் போடுகிறோம் என கூனிக்குறுகுகிறார்கள்.

    காவல்துறையை சுதந்திரமாக வேலை செய்யவும் விடவில்லை. ஆளும்கட்சியும், தோழமைக் கட்சியும் காவலர்களையும், அதிகாரிகளையும் மதிப்பதில்லை. விசிக நிர்வாகி ஒருவர் வட்டாட்சியரைத் திட்டும் வீடியோ சமூகவலைதளங்களில் சுற்றுகின்றதே? நேரு, திருச்சி சிவா விவகாரத்தில் காவல் நிலையமே சூறையாடப்பட்டது.

    காவலர்களுக்கே பாதுகாப்பற்ற நிலை....

    திமுகவின் ஐடி விங்கில் இருப்பவர்கள் பெண் காவலரையே பாலியல் துன்புறுத்தல் செய்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த புதிதில் காவலர் ஒருவர் கொலை தொடங்கி, இப்போது விஏஓ கொலை வரை நடந்திருப்பதும் ஈராண்டில் தான்!

    டிஜிபி-யே காவலர்களை தனியாகச் செல்லாதீர்கள் என்கிறார். அப்படியானால் சாமானியர்களுக்கான பாதுகாப்பின் நிலை என்ன?

    கள்ளச் சாராய மரணங்களுக்கு திமுக அரசே பொறுப்பு....

    எந்த ஒன்றும் நடந்த பின்பே நடவடிக்கை எடுக்கின்றார்கள். தமிழகத்தில் கள்ளச்சாராயக் கலாச்சாரம் பெருகிவிட்டது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜனவரி மாதத்திலேயே குறிப்பிட்டு இருந்தார். அப்போதே நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தால் இத்தனை உயிர் இழப்புகள் ஏற்பட்டு இருக்காது. முன்கூட்டிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசு தான் இந்த மரணங்களுக்கு தார்மிக பொறுப்பேற்கவேண்டும்.

    இப்போது, ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது என விவரிக்கின்றார் சைலேந்திர பாபு. அப்படியானால் ஏற்கெனவே இவர்கள் எல்லாம் கள்ளச்சாராயம் விற்பது தெரியும் என்றுதானே அர்த்தம்?

    ஜெயலலிதா காலத்தில் எந்த கிராமத்திலாவது கள்ளச்சாராயம் காய்ச்சினால் அந்த கிராம நிர்வாக அலுவலரையும், இன்ஸ்பெக்டரையும் சஸ்பெண்ட் செய்துவிடுவார்கள். அதைத்தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் தொடர்ந்தார். சஸ்பெண்ட் ஆகிவிடக் கூடாதென அதிகாரிகள் கண்கொத்திப் பாம்பாக கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களைக் கண்வைப்பார்கள்.

    தமிழர்களுக்குக் குடிக்கக் கற்றுக்கொடுத்ததே கருணாநிதிதான்...

    டாஸ்மாக் கடையை மூடுவதாகச் சொல்லி வாக்குறுதி கொடுத்தார்கள். எதிர்கட்சியாக இருக்கும்போது கருப்பு சட்டையைப் போட்டுக்கொண்டு ஆங்காங்கே பதாகை பிடித்தெல்லாம் நின்றார்கள். தமிழர்களுக்குக் குடிக்கக் கற்றுக்கொடுத்ததே திமுகதான். அதுவும் கருணாநிதிதான்! இப்போது தமிழகம் குடியின் உச்சமாகிவிட்டது. வேறுவழியில் வருவாயைப் பெருக்கும்வழி இந்த அரசாங்கத்திற்குத் தெரியவில்லை. அதற்கான புத்தியும் திமுகவுக்கு இல்லை.

    நிர்வாகத்திறமையே இல்லாமல் டாஸ்மாக் வருமானத்தை மட்டுமே சார்ந்து உள்ளனர். நடப்பாண்டில் மட்டும் 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் வருமானத்தை உயர்த்தி இருப்பதும் ஈராண்டு ஆட்சியின் சாதனை தான்! அதிக மதுபாட்டில் விற்கும் டாஸ்மாக் அதிகாரிக்கு பாராட்டும், குறைவாக பாட்டில் விற்கும் அதிகாரிக்கு சார்ஜ் மெமோவும் கொடுக்கிறார்கள். சாராய அமைச்சரைப் பொறுத்தவரை மாமூல் மட்டும் போனால் போதும். வேறு எதைப் பற்றியும் அவருக்குக் கவலை இல்லை. ஒருகடைக்கு மாதம் 40 ஆயிரம் வரை மாமுல் போகிறது.

    ஜெயலலிதா காலத்தில் கொண்டுவந்த தாலிக்குத் தங்கம், ஸ்கூட்டி என மக்கள் நலத்திட்டங்களை எல்லாம் நிறுத்திவிட்டு, வருவாயை உயர்த்தியதாக வாய்சவடால் விடும் அரசாகவே திமுக அரசு உள்ளது. மொத்தத்தில் இது துக்ளக் தர்பார். கள்ளச் சாராய தர்பார்! என தெரிவித்தார்.

    Leave A Comment