DMK FILES: அண்ணாமலை மீது டிஆர் பாலு அவதூறு வழக்கு தாக்கல்!
திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது திமுக எம்.பி டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக நிர்வாகிகளின் சொத்துகள் குறித்து பட்டியல் வெளியிட்ட அண்ணாமலை, யார் யாருக்கு எவ்வளவு கோடி சொத்து என ஒரு வீடியோயும் வெளியிட்டார்.

திமுக அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் கனிமொழி, ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி வீராசாமி, டி.ஆர். பாலு, ஜெகத்ரட்சகன், துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன், கலாநிதி மாறன் ஆகிய 12 பேரின் சொத்து பட்டியல் என்ற பெயரில் சில ஆவணங்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

இந்த பட்டியல் தொடர்பாக, திமுக, முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல திமுக தலைவர்கள் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில், சொத்து பட்டியல் விவகாரம் தொடர்பாக அண்ணாமலை மீது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அடிப்படை ஆதாரமின்றி தன்னைப்பற்றி அவதூறு கருத்துக்களை கூறியதாக கூறி, அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் சார்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, முன்னதாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு சார்பில் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
அதில், 48 மணி நேரத்துக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால், வழக்கு தொடரப்படும் என்றும், இழப்பீட்டு தொகையாக 100 கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனவும் நோட்டீஸில் கூறப்பட்டிருந்தது.
இதேபோன்று திமுக சார்பில் பல நோட்டீஸ்கள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பப்பட்டிருந்த போதிலும் இதுவரை சொத்துப்பட்டியல் விவகாரத்தில் அண்ணாமலைக்கு எவ்வித நெருக்கடியும் ஏற்படுத்த முடியாத நிலையில் தற்போது அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave A Comment