• Login / Register
  • செய்திகள்

    உள்ளுராட்சி தேர்தல் தாமதத்திற்கு ரணிலே காரணம் - தேர்தல் ஆணைக்குழு!

    இலங்கையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை அறிவிக்கப்பட்டவாறு நடத்த முடியாமைக்கு நிதி அமைச்சராக உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே காரணம் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

    உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதியை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிதி அமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கப்பெறவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

    தேர்தலுக்கான நிதி அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கப்பெறும் என தாம் தொடர்ந்தும் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

    தேர்தலுக்கு தேவையான நிதியை விடுவிக்க வேண்டும் என கடந்த 12 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு, நிதி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

    நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

    இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவது தொடர்பில் நேரடித் தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும், அதற்கு நிதி அமைச்சரின் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் நிதி அமைச்சின் செயலாளர் அண்மையில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார்.

    நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த மாதம் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

    Leave A Comment