• Login / Register
  • செய்திகள்

    தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் - தொல். திருமாவளவன் வலியுறுத்து!

    தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அதனை முதலமைச்சர் ஸ்டாலின் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

    மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “தமிழ்நாடு ஆளுநர் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி உள்ளார், குறிப்பாக டெல்லி சென்று வந்ததிலிருந்து மாநில அரசிற்கு எதிரான போக்கை கடைபிடிக்காமல் அமைதியாக இருக்கிறார். மேலும் ஆளுநர் பொறுப்பிற்கு வேறு ஒருவரை நியமிக்க இருப்பதாக தகவல் வருகிறது” என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், “அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் பாஜகவிற்கு சாதகமாக அமையும். அதிமுகவின் இரு அணிகளும் போட்டி போட்டு கொண்டு பாஜகவிற்கு காவடி தூக்குகிறார்கள். பாஜக வளர்வது அதிமுகவிற்கும் நல்லதல்ல தமிழ்நாட்டிற்கும் நல்லதல்ல” என கூறினார்.

    “ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பாடுபடும். திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றனர். நிறைவேற்றப்படாதவற்றை விரைந்து செயல்படுத்த வலியுறுத்துகிறோம்.” என்றார்.

    சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், “ வட மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான குரல் வலுவாக உள்ளது. பீகாரில் இது குறித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு தேவை. அதற்கு திமுக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என கூறினார்.

    Leave A Comment