மோடிக்கு ரூட் கிளியர்; பின்வாங்கும் இந்தியா கூட்டணி - ஆலோசனைக் கூட்டத்தில் நடந்தது என்ன?
17 ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலத்தை வழங்காத நிலையில் புதிய ஆட்சியமைக்கும் முயற்சி இழுபறியாக காணப்பட்ட நிலையில் இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
18 ஆவது மக்களவைத் தோ்தலில் மத்தியில் ஆளும் பாஜக தனிப் பெரும்பான்மையைப் பெறாத நிலையிலும், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற (240) தனிப்பெரும் கட்சி என்ற நிலையை எட்டியுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக மட்டும் 303 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 தொகுதிகளில் வென்றிருந்தது.
இந்த தேர்தலின் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றுள்ளது.
தேர்தர் முடிவுகளின் அடிப்படையில் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், தனது தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளுடன் கைகோத்து, மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை பாஜகவுக்கு உருவாகியுள்ளது.
தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காத நிலையிலும், கூட்டணிக் கட்சிகளுடன் கைகோத்து கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்கும் நிலை பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.
கூண்டோடு ராஜிநாமா செய்த மோடி...
இந்நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்த பிரதமர் மோடி, பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யும் கடிதத்தையும், 17வது மக்களவையை கலைக்கும் அமைச்சரவைக் கூட்டத்தின் பரிந்துரையும் குடியரசுத் தலைவரிடம் கொடுத்தார்.
மோடியின் ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதுடன், புதிய அரசு அமையும் வரை பதவியில் நீடிக்குமாறு பிரதமரையும் மத்திய அமைச்சர்கள் குழுவையும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கேட்டுக் கொண்டார்.
18 ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரும் கிங் மேக்கர்களாக உருவாகியுள்ளனர்.
இந்தியா கூட்டணியின் எழுச்சி...
பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்தியா கூட்டணியாக இந்த தேர்தலை எதிர்கொண்டிருந்த நிலையில் 234 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.
காங்கிரஸ் 99, சமாஜவாதி 39, திரிணமூல் காங்கிரஸ் 29, திமுக 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
கடந்த தேர்தலில் 52 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் தற்போது 99 தொகுதிகளில் வென்றுள்ளது.
பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களைப் பெற, இன்னும் 38 இடங்கள் தேவைப்படும் நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவருடனும் ஆதரவு கோரி பேச்சுகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இருப்பினும் குறித்த இரு தலைவர்களும் தேசிய ஜனநாய கூட்டணியில் தொடர்வதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் ஆலோசனை
இந்நிலையில், அடுத்தகட்ட திட்டம் குறித்து இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஓமர் அப்துல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தின் தொடக்கத்தில் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, மக்களின் தீர்ப்பு நரேந்திர மோடிக்கு எதிரானது என்றும், இது அவருக்கு தார்மீக தோல்வி என்றும் கூறினார். மோடிக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய இழப்பு என்றாலும், மக்களின் விருப்பத்தைத் தகர்ப்பதில் அவர் உறுதியாக இருப்பதாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய காரணமாக இருக்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணிக்குள் கொண்டு வந்து ஆட்சியமைக்க முயற்சி செய்யலாமா? அல்லது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயல்படலாமா? என்பது குறித்து அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் ஆலோசனையை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டத்தை தொடர்ந்து வெளியே வந்த தலைவர்கள் குழுவாக புகைப்படம் எடுத்துகொண்டனர்.
பாசிச ஆட்சிக்கு எதிராக இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும் - மல்லிகார்ஜூன கார்கே
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, மோடி தலைமையிலான பாஜகவின் பாசிச ஆட்சிக்கு எதிராக இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும் என்று கூறினார்.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை - திருமாவளவன்
பாஜக ஆட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டி இருப்பதாகக் கூறிய விசிக தலைவர் திருமாவளவன், இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான எந்தவித சாத்தியக்கூறுகளும், முகாந்திரமும் இல்லை என தெரிவித்தார்.
சந்திரபாபு நாயுடுவை சந்தித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இதைத் தொடர்ந்து, சென்னை திரும்புவதற்காக டெல்லி விமான நிலையம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆந்திராவில் பெரும்பான்மை வெற்றிபெற்று ஆட்சியமைக்க உள்ள சந்திரபாபு நாயுடுவை சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் வென்ற சந்திரபாபு நாயுடுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததாகவும், சகோதர மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஆந்திரா இடையேயான உறவுகளை வலுப்படுத்த ஒத்துழைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். சந்திரபாபு நாயுடு மத்திய அரசில் முக்கியப் பங்காற்றுவார் என்றும், தென் மாநிலங்களுக்காக வாதிடுவார், நமது உரிமைகளைப் பாதுகாப்பார் என்று தான் நம்புவதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
நேருவின் சாதனையை சமன் செய்வாரா மோடி...?
இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்கியுள்ள நிலையில் அறிவிக்கப்பட்டவாறு வரும் ஜூன் 8 ஆம் தேதி பாஜக சுட்டணி ஆட்சி பொறுப்பேற்பது உறுதியாகியுள்ளது.
இதன் மூலம் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவி ஏற்க உள்ள நிலையில், தொடா்ந்து மூன்று முறை பிரதமரான முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் சாதனையை பிரதமா் மோடி சமன் செய்யவிருக்கிறமை குறிப்பிடத்தக்கது.
Leave A Comment