ரூ.2000 நோட்டுக்களை மாற்ற இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன ..?
ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.
1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்த போது அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்துவதாக கடந்த மே மாதம் 19ஆம் தேதி ஆர்பிஐ அறிவித்த நிலையில், அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என தெரிவித்தது.
மக்களின் வசதிக்காக, போக்குவரத்துக் கழகங்கள், இ-மின்னணு நிறுவனங்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்வதாக அறிவித்திருந்தது. அவையும் தற்போது அதனை நிறுத்திக்கொள்வதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஆகஸ்ட் 31ஆம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த 3.32 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாக ஆர்பிஐ அறிவித்திருந்தது. 87 சதவீத நோட்டுகள் வங்கியில் வரவு வைக்கப்பட்டதாகவும், 13 சதவீத நோட்டுகள் சில்லறையாக மாற்றிக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே, 97 சதவீத நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும் என கருதப்படுகிறது.
இதேவேளை இடைப்பட்ட நாட்களில் நாட்டின் பல பகுதிகளிலும் வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறிப்பாக, குவகாத்தி, ராஞ்சி பகுதிகளில் செப்டம்பர் 25ஆம் தேதி வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு, கொச்சி, ஸ்ரீநகர், திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 27ஆம் தேதி வங்கி விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 28ஆம் தேதி, சென்னை, பெங்களூரு, இம்பால், ஹைதராபாத், கான்பூர், லக்னௌ, மும்பை, புதுதில்லி, ராய்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வங்கிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, உங்கள் நகரங்களில் வங்கிகளுக்கு விடுமுறை குறித்த தகவல்களை அறிந்துகொண்டு, கையில் 2000 ரூபாய் இருந்தால் உடனடியாக வங்கிகளில் கொண்டு சென்று மாற்றிக்கொள்ளுங்கள்.
Leave A Comment