• Login / Register
  • மேலும்

    கடல் அட்டை கடிக்குமா?

    அட்டை என்ற பேரைக் கேட்டாலே கிட்ட நெருங்க கொஞ்சம் அச்சப்படுவோம். ஆனால், கடல் அட்டைகளைக் கண்டுபயப்படத் தேவையில்லை. அவை வேறு ரகம்.

    கடல் அட்டைகளில் 900 முதல் 1250 வகை கடல்அட்டைகள் இருக்கின்றன. எகினோடேர் (Echinoderms) என்ற சொல்லுக்கு தமிழில் முட்தோலி என்று பெயர். முட்தோலிகளில் மொத்தம் 6 ஆயிரம் வகைகள் உள்ளன. இந்த எகினோடேர் என்றவகைப்பாட்டில், மூரை (Sea urchin), உடுமீன் எனப்படும் நட்சத்திர மீன், கடல்அட்டை எல்லாமே அடங்கக் கூடியவை.

    கடல் அட்டைகள் கறுப்பு, நீலம், பச்சை, பழுப்பு என பல தனித்தனி வண்ணங்கள் கொண்டவை. நீண்ட குழாய் போன்ற உடல் கொண்டவை. இவற்றில்சில 2 சென்டிமீட்டர் நீளமே இருக்கும். மிகப்பெரிய கடல்அட்டை மூன்றடி நீளம் வரை இருக்கலாம்.

    லெதர் (Leather) மாதிரியான தோல் (Skin) கொண்ட அமைதியான கடல் உயிரினம் இது. எதிரியிடம் சிக்கினால் குடல் உள்பட உடலின் உள்ளே இருக்கும் அனைத்து உறுப்புகளையும் உண்ண வரும் எதிரிக்குஅன்பாக அள்ளித்தரும் தரக்கூடிய ஓர் உயிரினம் இது.

    இப்படி எதிரிக்கு உடலுறுப்பு தானம் செய்யும் கடல் அட்டைக்கு, ஒன்றரை முதல் 5 வாரங்களில் இந்த உள்ளுறுப்புகள் மீண்டும்வளர்ந்து விடும். 

    எதிரிகளுக்கு இப்படி தன் உள்ளுறுப்புகளை உண்ணத்தரும், அன்புவழி கடல் அட்டைகள் ஒருபுறம்இருக்க,  எதிரிகளைஎதிர்கொண்டால் உடலை முரடாக்கி, விறைப்பாகி முரண்டு பிடித்து அதன்மூலம் உண்ணப்படாமல் தப்பிக்கும் கடல் அட்டைகளும் இருக்கின்றன. உடலை விறைப்பாக்கியோ, தளர்த்தியோ பாறை இடுக்குகளில் சிலவகைகடல் அட்டைகள் ஒளிந்து கொள்ளவும் செய்யும்.

    கடல் அட்டைகள். மலர்ந்தும் மலராத பாதிமலர் போல, கடலடி மணலில் புதைந்தும் புதையாமலும் கிடக்கும். கடலில் சூரிய ஒளியால் ஏற்படும் வெப்பம் தாக்காமல் இருக்க இது மணலை தன்மேல் இட்டு மூடிக்கொள்ளும்.

    குச்சட்டை : தொட்டவுடன் புதுமணபெண் போல கொழகொழவென துவண்டுவிடக்கூடியது குச்சட்டை. மனிதர்கள் இதை உண்ண மாட்டார்கள்.

    நூல்அட்டை : மஞ்சளும், மரப்பட்டை நிறமும் (கூடவே கொஞ்சம் காபி) கலந்த நிறமுடைய அட்டை இது. அதிகாலை நேரம்கடல் வற்றிக்கிடக்கும் போது குறிப்பிட்ட ஒருபாதையில் இந்த அட்டைகளைத் தேடிச்சென்றால் ஒரு அட்டை கூடகண்ணில் படாது.

    கடலில், நண்பகல் வேளையில் வெள்ளம் பெருகி வாங்கல் ஏற்பட்ட பிறகு அதே பாதையில் நாம் மீண்டும் பயணித்தால் இப்போது கணக்கற்ற கடல்அட்டைகளை அந்தவழியே காணலாம். கடல் வற்றும்போது மணலுக்குள்ஓரடி புதைந்து கொள்வதும், கடலில் பெருக்கு ஏற்படும் போது வெளியே மீண்டும்வெள்ளெலி போல தலையைக் காட்டுவதும்இந்த கடல் அட்டைகளின் வழக்கம்.

    நீரோட்டத்தில் உருளவும், புரளவும் செய்யும் இந்த கடல் அட்டைகள் நிறம் மாறவும் கூடியவை. இந்த கடல் அட்டையை ஆசைப்பட்டு கையில் பிடித்தால்,  பிசுபிசுப்பானஒருவகை பசை போன்ற திரவத்தைஇவை கக்கும். 

    வெண்ணிற சாக்கு நூல்போன்ற இந்தப் பிசு பிசுப்புப் பசை, எதன் மீது ஒட்டுகிறதோஅதை விடவே விடாது. தொட்டுத் தொடரும் இந்த பட்டுத்திரவம் நம்கை கால்களில் ஒட்டினால், முடியுடன் சேர்த்து இந்த பசையை பிய்த்துஅகற்ற வேண்டியிருக்கும். பெவிகுயிக் போன்ற பசை தரும் இந்தபாசக்கார அட்டையை யாரும் உண்ண மாட்டார்கள்.

    இலைப்பச்சைஅட்டை : பச்சைப்பசேல் என இலைப்பச்சை நிறத்திலும், கருநீல நிறமாகவும் இரு வண்ணங்களுக்கு மாறக்கூடிய அட்டை இது. விலை உயர்ந்த இந்த அரிய அட்டை, தமிழகத்தின் வான்தீவு, கோபுரத்தீவு, புளுவுணி சல்லித்தீவு, காசுவார் தீவுகளில் கடலையொட்டிய பகுதிகளில் அதிகம் காணப்படும்.

    பூரான் அட்டை, பாவைக்காய் அட்டை :  தூத்துக்குடிகடல்பகுதியில் மிக அதிக அளவில்கிடைக்கக் கூடிய அட்டையினம் இது. தேரி மணல்போல கடலடியில் கோடிக் கணக்கில் இவை குவிந்து கிடக்கும். திறமையான சங்கு குளிப்பவர் ஒருவர் நாளொன்றுக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கடல் அட்டைகளை எடுத்துவிடமுடியும். உண்ணத்தகுந்த மிக அரிய இனகடல் அட்டையான இது, பொரித்த கணவாய்இறைச்சி போல சுவை கொண்டது.

    வாய்ப் பகுதியில் இது குழாய் கால்களைக் கொண்டது. அதன்மூலம் இரையை வாய்க்குள் செலுத்தக்கூடியது. இது குடலைக் கக்கிவெளியேற்றினால் கூட உள்சதை அரைஅங்குலம் வரை காணப்படும். கடல் அட்டைகள் குடலோடு மணலையும் கக்கக் கூடியவை.

    வின்னி அட்டை : துணிதுவைக்கும் போது அதில் உள்ளஅழுக்கு நீங்க, பலநூறு குச்சங்கள் கொண்ட பிரஷ்சைப் பயன்படுத்துவோம் இல்லையா ? அதுபோன்ற உருவத்தோற்றம் கொண்டது வின்னி அட்டை. பல ஆயிரம் நுண்கால்களால் இது நகரும். அப்படிநகரும்போது கடல்தரையில் 4 விரல்கடை அளவுக்கு ஒரு தடத்தை ஏற்படுத்திச்செல்லும்.

    வின்னி அட்டையின் மேற்பகுதி சிவப்பு நிறமாகவும், வயிறு அடிப்பகுதி அழுக்கு வெள்ளையாகவும் திகழும். கடல்நீரில் இருக்கும்போது ஒன்றரை அடி நீளமான இந்தஅட்டை கையில் எடுத்ததும் அரையடியாக சுருங்கி விடுவது ஓர் அதிசயமே. மீண்டும்நீரில் போட்டால் பழையபடி ஒன்றரை அடி நீளத்தை இதுஎட்டும். கடலடியில் வண்டல்படிந்த தரைகளில் காணப்படும் இந்த வின்னி அட்டைவிலைமதிப்புள்ளது.

    கறுப்பு அட்டை : தூத்துக்குடி பகுதி கடல் தாவுகளில் அதிகம்காணக்கூடிய அட்டையினம் இது. மனிதர்களின் பார்வையில்இது மதிப்புடையது.

    அதுபோல கறுப்பு மற்றும் ரோஸ் நிறமான ஓர்அட்டை நல்லதண்ணீர் தீவு பகுதியில் கிடைக்கக் கூடியது. கையில் எடுத்தால் விறைப்பாகும் இந்த அட்டை, கையில்இருந்து விடுவித்தால் ஊதிவிட்ட பலூன் போல தொய்ந்து போகும். இந்த அட்டை உண்ணத்தகுந்த அட்டை அல்ல.

    கடல் அட்டைகளின் முக்கிய வாழ்விடம் பவழப்பாறைகளும், அதைச்சுற்றியுள்ள மணல்வெளிகளும்தான். ஓர் ஏக்கர் நிலத்தில் 2 ஆயிரம் அட்டைகள் வரை இருந்தால் அதுவளமான கடல். கடல்அட்டைகள் மணலை உட்கொண்டு அதில்இருக்கும், நுண்ணிய தாவர, விலங்கு உயிர்களை உணவாக்கி ஆண்டுக்கு 60 டன் மணலை சுத்திகரித்துவெளியே தள்ளுகின்றன.

    கடல் அட்டைகள் வெறும் உணவுக்காக மட்டுமே மனிதர்களால் ஏற்றிப் போற்றப்படுவதில்லை. மார்பக புற்றுநோய் செல், கல்லீரல் புற்றுநோய் செல்களை 95 விழுக்காடு வரை அழிக்கும் மாமருந்துஎன்பதாலேயே மனிதர்களால் கடல்அட்டைகள் மதிக்கப்படுகின்றன.

    கடல் மணலில் உள்ள நுண்சத்துகளும், அழுகியபொருள்களுமே கடல் அட்டைகளின் உணவு. மணலைத்தின்று அதில் உள்ள நுண்சத்துகளை ஈர்த்து, இப்படி சுத்திகரிக்கப்பட்ட மணலை, சேமியா போன்ற இழையாக கடல் அட்டை வெளியேதள்ளும். கடல்அட்டை இப்படி வெளித்தள்ளும் மணல், தூய குருத்து மணல்ஆகும்.

    பலகாலம் உணவின்றி உண்ணாநோன்பு இருந்து உடல் மெலிந்து போகும்கடல் அட்டைகளும் உண்டு. கடல் அட்டையின் ஒருமுனையில் வாய். மறுமுனையில் கழிவை வெளியேற்றும் துளை அமைந்திருக்கும்.

    இனி கடல் அட்டைகளின் சில வகைகளைப் பார்ப்போம் …

    Leave A Comment