• Login / Register
  • கட்டுரைகள்

    சீனா பக்கம் சாய்கிறதா இலங்கை..? ரணில்-ராஜபக்சே கட்சி பிரமுகர்கள் குழு சீனா பயணம்!

    இலங்கை தீவை மையமாக கொண்டு புவிசார் அரசியல் தீவிரம் பெற்றுவரும் நிலையில் இலங்கை ஆளும்கட்சி கூட்டணியை சேர்ந்த 15 பேர் கொண்ட குழு ஒன்று சத்தமின்றி சீனா சென்றுள்ளது.

    இலங்கை தீவை கடன் பெறிக்குள் சிக்கவைத்து தனது நலன்களை சீனா நிறைவேற்றி வருவதாக குற்றச்சாட்டு ஒருபக்கம் சீனாவின் ஆதிக்கத்திற்கு போட்டியாக இந்தியா, அமெரிக்க தரப்பின் போட்டி நகர்வுகள் ஒருபக்கம் என இலங்கை தீவை மையப்படுத்திய புவிசார் அரசியல் நாளுக்கு நாள் தீவிரம் பெற்றுவருகிறது.

    வரலாறுகானாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகளும் ஒத்துழைப்புகளும் பக்கபலமாக இருந்தது.

    சர்வதேச நாணய நிதிய உதவியின் பின்னணியில் அமெரிக்காவும் இலங்கையின் மீதான செல்வாக்கினை வலுப்படுத்தி வருகிறது.

    இலங்கையில் ஆதிக்கம் செலுத்துவதில் இந்தியாவுக்கும் அமெரிக்காவும் இடையேயான மோதல் போக்கு அண்மைய நாட்களில் தீவிரம் பெற்றுள்ளது.

    இவ்வாறான நிலையில், இலங்கை ஆளும் கட்சி குழு ஒன்று சீனா சென்றுள்ளது அரசியல் கடந்து சர்வதேச மட்டத்தில் கவனிப்பை பெற்றுள்ளது.

    ஆளும் கட்சி கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 15 பேர் கொண்ட குழுவினர் இவ்வாறு சீனாவுக்கு சென்றுள்ளனர்.

    இந்த குழுவில் பங்கேற்றிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் மருமகன் நிபுன ரணவக்கா, ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன ஆகியோர் ஆளும் கட்சி கூட்டணி தரப்பில் முக்கியமானவர்களாக பார்க்கப்படுகின்றனர்.

    மகிந்த ராஜபக்ச தரப்பில், டி.வி.சானக்க, ராஜபக்சவின் மருமகன் நிபுன ரணவக்கா, தேசிய அபிவிருத்திக்கான ஊடக மையத்தின் கவுன்சிலர் / பணிப்பாளர், ரவீந்திர சமரவிக்ரம (சிரேஷ்ட விரிவுரையாளர்), உதார விஜேசிங்க (தலைவர் - முந்திரி கூட்டுத்தாபனம்), கனிஷ்க பண்டார (எல்எல்பி, லண்டன்), சுதர்மா குலதுங்க (பத்திரிகையாளர்), சுதிமா சாந்தனி (செயலாளர், உள்ளூராட்சி மன்ற கூட்டமைப்பு), தம்பிராஜா தஜீவரன் மற்றும் கோரகபிட்டியகே சமிந்த அருண சாந்த ஆகியோரும்,

    ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, எரந்தி ரங்க பண்டார, ஜெயராஜ் விஷ்ணுராஜ், சஜன சூரியாராச்சி மற்றும் துமிந்த ஆட்டிகல ஆகியோர் குழுவில் இணைந்துள்ளனர்.

    சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் இவர்கள் அங்கு சென்றுள்ளதாகவும், இந்த வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதாகவும் இலங்கையில் இருந்து வெளியாகும் ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

    இலங்கையில் இருந்து சென்றுள்ள இக்குழுவினர் ஒன்பது நாட்கள் சீனாவில் தங்கியிருப்பர் என்று கூறப்படுகிறது.

    இதன் போது அவர் சீனாவின் இரண்டு மாநிலங்களுக்கு செல்லவுள்ளனர்.

    இதேவேளை இந்த விஜயம் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் கவலையை ஏற்படுத்தலாம் என அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர் என்று இணைத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

    இத்தகைய விஜயங்களின் போது, சீனா தனது முன்னேற்றத்தையும் அதன் சிறப்புத் திட்டங்களின் வெற்றியையும் அரசியல்வாதிகள், செய்தியாளர் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு எடுத்துக் காட்டுகிறது.

    இந்தநிலையில், சீனா சென்றுள்ள 15 பேர் கொண்ட குழுவில் இளம் அரசியல்வாதிகள் பலர் அடுத்த தேர்தலில் பங்கேற்க தயாராகி வருகின்றனர் என்றும் இணைத்தளம் குறிப்பிட்டுள்ளது

    குன்மிங் மற்றும் யுனான் மாகாணங்களுக்கு இலங்கை அணி பயணம் செய்யவுள்ளது. மாகாண தலைநகரங்களில் உள்ள இலங்கைப் பிரதிநிதிகள் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

    சீனாவின் நன்கு அறியப்பட்ட வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற மறுமலர்ச்சி திட்டங்கள் குறித்த கருத்தரங்கிலும் குழு பங்கேற்கும். குழு உறுப்பினர்கள் பல மாதிரி கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு நவீன விவசாய முறைகளை அவர்கள் கண்காணிக்கவுள்ளனர்.

    பயணத்தின் இறுதிக்கட்டத்தில், தூதுக்குழுவினர் ஃபுஜியான் மாகாணத்திற்கும், அதன்பின் தலைநகர் பீய்ஜிங்கிற்கும் பயணம் மேற்கொள்வார்கள்.

    இதற்கிடையில் நிபுணர்களின் கூற்றுப்படி, இலங்கையில் இருந்து வருவோரை சீனா தனது சாதனைகளைக் காட்டி ஈர்க்க விரும்புகிறது என்பது இந்த பயண நிகழ்ச்சி நிரலில் இருந்து தெளிவாகிறது என்றும் இணைத்தளம் குறிப்பிட்டுள்ளது.

    இலங்கையில் தமது செல்வாக்கை தக்கவைத்துக்கொள்ள சீனா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இந்தியாவும் அமெரிக்காவும் உன்னிப்பாக அவதானித்து வருவதால் இந்த நடவடிக்கை மேலும் கவலையை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    Leave A Comment